சென்னை உயர் நீதிமன்றத்திற்கு ஐந்து பேரை கூடுதல் நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டதைத் தொடர்ந்து ஐந்து நீதிபதிகளில் ஒருவராக வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்த விக்டோரியா கவுரி நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் விக்டோரியா கவுரி நியமனத்தை திரும்பப் பெற, கொலிஜியம் உள்ளிட்ட உரிய அதிகார அமைப்புகளை வலியுறுத்த வேண்டும் என முதல்வருக்கு, வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மதிமுக பொதுச் செயலாளரும் எம்.பி.யுமான வைகோ எழுதியுள்ள கடிதத்தில், “உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான கொலிஜியம் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு விக்டோரியா கவுரியை நீதிபதியாக நியமிக்க ஜனவரி 17ஆம் தேதியன்று பரிந்துரைத்துள்ளது.
பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணியான மகிளா மோர்ச்சா அமைப்பில் நிர்வாகியாக உள்ள இவர், மத வெறியைத் தூண்டும் வகையில் பேசியிருப்பது பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.
சமூக வலைதளங்கள் மற்றும் ஆர்.எஸ்.எஸ் நடத்துகின்ற கூட்டங்களில் சிறுபான்மையினருக்கு எதிராக வெறுப்புப் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக இவர்மீது குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
இஸ்லாமிய, கிறிஸ்துவ மதங்களுக்கு எதிராக விக்டோரியா கௌரி பேசி இருப்பதை குறிப்பிட்டு, சிறுபான்மை சமூகத்தின் மீது இத்தகைய வெறுப்புணர்வைக் கொண்டிருக்கும் ஒருவருக்கு கொலிஜியம் பரிந்துரைத்து இருப்பது கவலையளிக்கிறது.
இந்தப் பரிந்துரையை திரும்பப் பெற வலியுறுத்தியும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர்கள் 21 பேர் குடியரசு தலைவருக்கும், கொலிஜியத்தின் உறுப்பினர்கள் மூவருக்கும் தனித்தனியாகவும் கடிதம் அனுப்பி உள்ளார்கள்.
ஒரு அமைப்பின் சித்தாந்த பின்புலத்தில் இருந்து கொண்டு மற்ற மதங்களை இழிவாகவும், வெறுப்புணர்வை தூண்டும் வகையிலும் பேசி வரும் ஒருவரை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், அரசியலமைப்பின் நோக்கங்களுக்கு அது எதிரானதாக அமையும் என்றும் மூத்த வழக்கறிஞர்களும், நான் உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கண்டனம் தெரிவித்திருக்கிறோம்.
இவர் நீதிபதியாக நியமிக்கப்பட்டால் சிறுபான்மையினருக்கு உரிய நீதி எப்படி கிடைக்கும் என்பதுதான் அனைவரின் கேள்வியாக இருக்கிறது.
தங்கள் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்ற நாளில் இருந்து சிறுபான்மையினருக்கு காவல் அரணாகவும், சமூக நீதியை பாதுகாக்கும் வகையிலும் தொடர்ந்து சிறப்பாக இயங்கி வருகிறது.
விக்டோரியா கவுரி அவர்கள் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டால், சட்டம் அனைவருக்கும் சமமானது என்ற கோட்பாடு கேள்விக்குறியாகி விடும்.
ஆகவே, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், இந்த விவகாரத்தில் தலையிட்டு, விக்டோரியா கவுரி அவர்களின் நியமனத்தை திரும்பப் பெற, கொலிஜியம் உள்ளிட்ட உரிய அதிகார அமைப்புகளை வலியுறுத்த வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்?” என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் உச்ச நீதிமன்ற கொலிஜியத்தின் பரிந்துரைக்கு எதிராகவும், உயர் நீதிமன்ற நீதிபதியாக விக்டோரியா கவுரியை நியமிப்பதற்கு எதிராகவும், சென்னை உயர்நீதிமன்றத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் சுமார் 21 பேர் கையெழுத்திட்ட கடிதத்தை குடியரசு தலைவருக்கும் உச்ச நீதிமன்ற கொலிஜியத்துக்கும் அனுப்பி வைத்துள்ளனர்.
இது தொடர்பான மனுவும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்களின் கோரிக்கையை ஏற்பதாக தெரிவித்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திரசூட், வழக்கறிஞர் விக்டோரியா கவுரிக்கு எதிரான வழக்கை இன்று விசாரிப்பதாக தெரிவித்துள்ளார்.
ராஜ்
’தீ தளபதி’ 300 கோடி வசூல் கிளப்பில் இணைந்த வாரிசு!
ஊரெல்லாம் உன்னை கண்டு வியந்தாரா..கல்லூரி விழாவை களைகட்ட செய்த நயன்தாரா