நேற்றே ஏன் கேட்கவில்லை? தமிழிசைக்கு கி. வீரமணி கேள்வி!

அரசியல்

பாஜகவினர் தோல்விக்கு முன்னுரை பாட தொடங்கிவிட்டனர் என்று கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நேற்று ஒரே கட்டமாக நடைபெற்றது.
இதில் வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னையில் வாக்கு சதவிகிதம் குறைந்திருக்கிறது.

இதுதொடர்பாக முன்னாள் ஆளுநரும் பாஜக தென் சென்னை வேட்பாளருமான தமிழிசை சவுந்தரராஜன், “வெள்ளிக்கிழமை வாக்குப்பதிவை வைத்ததால், அதனைத் தொடர்ந்து 2 நாட்கள் விடுமுறை என்பதால் இந்த முறை வாக்கு சதவீதம் குறைந்துள்ளது” என்று கூறியிருந்தார்.

மேலும், “மயிலாப்பூர் 13-வது வாக்குச்சாவடி 122வது வட்டத்தில் 50 பேர் உள்ளே புகுந்து அதிகாரிகளை அடித்து, மிரட்டி கள்ள ஓட்டு போட முயற்சி செய்துள்ளனர்” என்று திமுகவினர் மீது குற்றம்சாட்டியிருந்தார் தமிழிசை.

இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி,
“நேற்றைய வாக்குப் பதிவின்போது எந்த இடத்திலும் கலவரமோ அல்லது வாக்குச் சாவடிகளில் சண்டைகளோ நடைபெறாமல், பல கட்சித் தேர்தல் முகவர்கள் முன்னி லையில் தேர்தல் சுமூகமாகத்தான் நடந்து முடிந்துள்ளது.

மாலை 6 மணிக்குள் வாக்குப் போட வந்தவர்களுக்கு- பல வாக்குச்சாவடிகளில் ‘டோக்கன்’ கொடுத்து வரிசை யில் நிற்க வைத்து அனைவரும் வாக்குப் போட்ட பிறகே, வாக்குப் பெட்டிக்குச் ‘சீல்’ வைக்கப்பட்ட செய்திகளும் வந்துள்ளன.

தங்களுக்குத் தோல்வி உறுதி என்றவுடன், கோவை பா.ஜ.க. வேட்பாளர் அண்ணாமலை, தென்சென்னை பா.ஜ.க. வேட்பாளர் தமிழிசை சவுந்தரராசன், மத்திய சென்னை பா.ஜ.க. வேட்பாளர் வினோஜ் பி.செல்வம் ஆகியோர் இன்று (20-4-2024) காலை புதுப்புது வாதங்களைக் கூறி, ‘ஒப்பாரி’ வைத்துப் பேட்டி தந்ததைப் பார்த்தபோது, எப்படி சிரிப்பது என்றே தெரியவில்லை!

‘‘வெள்ளிக் கிழமை தேர்தல் வைக்காமல், புதன் கிழமை வைத்திருக்க”வேண்டுமாம்; விடுமுறையில் மக்கள் ஊருக்குப் போய்விட்டார்களாம். அது யாருடைய பொறுப்பு?
நிறையப் பேருக்கு வாக்காளர் பட்டியலில் பெயர்கள் விடுபட்டுள்ளனவாம்! பா.ஜ.க. என்ன செய்துகொண்டிருந்தது?

‘‘தி.மு.க.வினர் வாக்குச் சாவடிக்குள் புகுந்து பா.ஜ.க. முகவரை வெளியேற்றினார்கள்” என்கிறார் தமிழிசை சவுந்தரராஜன்.

அப்படி ஒரு புரளியை திடீரென்று இன்று (20-4-2024) காலை வந்து சொல்கிறார்களே, நேற்று (19-4-2024) ஏன் இதுகுறித்துப் பேசவில்லை? ஊடகங்கள் எங்கேபோயினவாம்?

சொல்லப்போனால், வாக்குச்சாவடியில் பிரச்சினை செய்ததாக கன்னியாகுமரி தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் உதவியாளர் உள்பட ஆதரவாளர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் என்பதே உண்மை.

‘‘நூறு சதவிகித வாக்குப் பதிவுக்குப் பல கோடி ரூபாய் விளம்பரம் செய்தும் பயனில்லை” – பலன் இல்லையாம்.

குற்றம் சுமத்தி, தோல்விக்கு இப்போதே அச்சார சமாதானங்கள் சொல்லக் கிளம்பியுள்ளவர்களுக்கு ஒரே கேள்வி!

தேர்தல் ஆணையம் யாருடைய அதிகாரத்தின்கீழ்?
ஒன்றிய அரசின்கீழா? அல்லது மாநில அரசின் கீழ் இயங்குகிறதா?

இந்தியாவில் மூன்று தேர்தல் ஆணையர்களையும் நியமித்தது யார்?
முன்பே நீங்கள், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா போன்றவர்களிடம்

இதுபற்றி பகிரங்கமாகப் பேசினீர்களா?
தோல்விக்கு முன்னுரை பாடுவதாகவே விவரம் அறிந்தவர்கள் புரிந்துகொள்கிறார்கள்” என்று விமர்சித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

காவி நிறத்திற்கு மாறிய ’டிடி நியூஸ்’ லோகோ!

Tillu Square: ஓடிடி ரிலீஸ் எப்போது?

+1
0
+1
1
+1
0
+1
4
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *