கொரோனா வைரஸின் பிடியில் இருந்து தப்பிக்க ‘படையப்பா’ நீலாம்பரி போல இருங்கள் என்பதான மீம் சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்துள்ளது.
கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக உலகம் முழுவதிலும் இதுவரை 11, 417 பேர் மரணமடைந்துள்ளனர். உலக நாடுகள் அனைத்தையும் பெரும் பீதியில் ஆழ்த்தியிருக்கும் இந்த வைரஸ் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதன் பிடியில் சிக்காமல் இருக்கவும், வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கவும் அரசு தரப்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
உலகமே பெரும் பயத்தில் இருக்கும் இந்த சூழலில் தமிழக மீம் கிரியேட்டர்கள், கொரோனா விழிப்புணர்வு மீம்களை வெளியிட்டு வருகின்றனர். அவற்றில் கொரோனா பரவுதலைத் தடுக்க படையப்பா நீலாம்பரியாக இருங்கள் என்று குறிப்பிட்டு வெளியிடப்பட்டுள்ள மீம் சிரிக்க மட்டுமின்றி சிந்திக்கவும் வைத்துள்ளது.
ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்து மாபெரும் ஹிட்டான ‘படையப்பா’ திரைப்படத்தில் ரம்யாகிருஷ்ணன் நீலாம்பரியாக நடித்திருப்பார். அதில் நீலாம்பரி கதாபாத்திரம் ஒரே அறையில் 18 வருடங்கள் தங்கியிருப்பதாக காட்சி இடம்பெற்றிருக்கும். அதே போன்று 14 நாட்கள் உங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள் என்பதாக அந்த மீம் உள்ளது.
அதில், நீலாம்பரி கதாபாத்திரத்தில் இருக்கும் ரம்யாகிருஷ்ணனின் புகைப்படத்தைக் குறிப்பிட்டு, **“இவர் தான் நீலாம்பரி. இவர் நிலைமையைப் புரிந்துகொண்டு வீட்டுக்குள்ளேயே தங்கி இருந்தார். நீலாம்பரி தன்னைத் தனிமைப் படுத்திக் கொண்டார். மக்களிடம் இருந்து பல அடிகள் தொலைவிலேயே இருந்தார். நீங்களும் நீலாம்பரி போல இருங்கள்”** என்பதாக அந்த மீம் உள்ளது.
இந்த மீம் சமூகவலைதளங்களில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
**-இரா.பி.சுமி கிருஷ்ணா**
�,”