தமிழின் பிஸியான நடிகர்களில் ஒருவர் தனுஷ். தமிழ் மட்டுமின்றி ஹாலிவுட், இந்தி, தெலுங்கு என தன்னுடைய எல்லைகளை விரித்துவருகிறார் தனுஷ். இந்த வருடம் தனுஷூக்கு மாரிசெல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் & கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ‘ஜெகமே தந்திரம்’ படங்கள் வெளியானது. 2021-க்கான அடுத்த ரிலீஸாக பாலிவுட்டில் அக்ஷய்குமாருடன் நடித்திருக்கும் ‘அட்ராங்கி ரே’ வெளியாக இருக்கிறது.
இந்நிலையில், ரூஸோ பிரதர்ஸ் இயக்கத்தில் ஹாலிவுட் படமான ‘க்ரே மேன்’ பட ஷூட்டிங்கை முடித்திருக்கும் தனுஷ் தற்பொழுது, கார்த்திக் நரேன் இயக்கத்தில் ‘மாறன்’ படத்தில் நடித்துவருகிறார். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ், மாளவிகா மோகனன் நடித்துவரும் இப்படத்தின் படப்பிடிப்பு முக்கால் பாகம் முடிந்துவிட்டது.
அதே நேரத்தில், மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் ‘திருச்சிற்றம்பலம்’ படத்தின் படப்பிடிப்பும் துவங்கிவிட்டது. இவ்விரு படங்களின் பணிகளையும் ஒரே நேரத்தில் கவனித்துவருகிறார் தனுஷ்.
தனுஷின் 43வது திரைப்படமாகத் தயாராகிவரும் மாறன் பட இயக்குநர் கார்த்திக் நரேனாக இருந்தாலும், தனுஷ் 44வது படமான திருச்சிற்றம்பலம் படத்தை மித்ரன் ஜவஹர் இயக்கிவந்தாலும் தனுஷின் ஆதிக்கமும் தலையீடும் இரண்டு படங்களிலும் அதிகமாக இருக்கிறதாம்.
இரண்டு படங்களின் படப்பிடிப்பிலும் இயக்குநருக்கான வேலையையும் செய்கிறாராம் தனுஷ். இதனால், கார்த்திக் நரேன் கொஞ்சம் அப்செட்டாக இருக்கிறார். தனுஷின் தலையீடை எப்படி டீல் செய்வதென தெரியாமல் இருக்கிறார். ஆனால், மித்ரன் ஜவஹர் அப்படியே நேரெதிர். தனுஷின் தலையீடுகளை ஜஸ்ட் கூலாக எடுத்துக் கொள்கிறாராம். ஏற்கெனவே, உத்தமபுத்திரன், யாரடி நீ மோகனி படங்களில் தனுஷூடன் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தனுஷின் மனைவி ஐஸ்வர்யா இயக்கத்தில் தனுஷ், ஸ்ருதி நடித்து வெளியான படம் 3. இந்தப் படம் ஐஸ்வர்யா இயக்கியிருந்தாலும், தனுஷே படத்தை இயக்கியதாக அந்த நேரத்தில் சொல்லப்பட்டது. தற்பொழுது, அதே மாதிரியான தகவல்கள் தற்பொழுது கசிந்திருக்கிறது.
தனுஷூக்குள் ஒரு கமர்ஷியல் ஹிட் இயக்குநர் எப்போதுமே இருப்பார். அதற்கு சரியான விடையென்றால், தனுஷ் இயக்கி வெளியான பா.பாண்டி படத்தைக் கூறலாம். இருப்பினும், இயக்குநர்களின் சொந்த படைப்புகளில் தலையிடுவது எந்த இடத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாது என்பது தான்.
**- தீரன்**
�,