சித்திக் சார் இயக்கிய ஃப்ரெண்ட்ஸ் படப்பிடிப்பின் போது தான் நான் முதன்முறையாக செட்டில் தொடர்ந்து இருக்க ஆசைபட்டதாக நடிகர் சூர்யா உருக்கமுடன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
பிரபல மலையாள இயக்குனர் சித்திக் (69) மாரடைப்பு காரணமாக கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று (ஆகஸ்ட் 8) இரவு உயிரிழந்தார்.
நகைச்சுவை திரைப்படங்களால் தங்களை சிரிக்க வைத்தவரின் உடலுக்கு கடைசியாக மம்முட்டி, ஜெயராம், சாய்குமார், ஃபஹத் ஃபாசில், ஃபாசில், திலீப் என மலையாள திரையுலகின் பிரபலங்களும், பொதுமக்களும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
அதனைத்தொடந்து எர்ணாகுளம் மத்திய ஜும்ஆ மசூதியில் அரசு மரியாதையுடன் சித்திக்கின் உடல் இன்று மாலை 6 மணியளவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இயக்குநர் சித்திக்கின் மறைவுக்கு முதல்வர் பினராயி விஜயன், எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன், ஆளுநர் ஆரிப் முகமது கான் மற்றும் அரசியல் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் தமிழில் சித்திக் இயக்கிய ஃப்ரெண்ட்ஸ் படத்தில் விஜயுடன் நடித்த சூர்யாவும் இன்று தனது இயக்குநரின் மறைவை அடுத்து நீண்ட உருக்கமான இரங்கல் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
அதில் ”நினைவுகள் விரைகின்றன, என் இதயம் கனமாக இருக்கிறது. சித்திக் சாரின் மறைவு ஒரு ஈடு செய்ய முடியாத இழப்பு.
அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். நான் இந்த துயரமான தருணத்தில் உங்கள் அனைவரோடும் இருக்கிறேன்.
ஃப்ரெண்டஸ் திரைப்படம் எனக்கு பல வழிகளில் முக்கியமான படமாக அமைந்தது. சித்திக் சார் இயல்பாகவே ஒரு ஊக்கமளிக்கும் மனிதர்.
நாங்கள் சில காட்சிகளில் இம்ப்ரொவைஸ் செய்தால் அதை பாராட்டிய பிறகே, தன்னுடைய கருத்தை தெரிவிப்பார்.
படப்பிடிப்பின் போதும், எடிட் செய்யும் போது மிகவும் நிபந்தனையற்ற அன்புடன் எனது நடிப்பை கூர்ந்து கவனித்து திருத்தம் செய்தார். ஃப்ரெண்ட்ஸ் படப்பிடிப்பின் போது தான் நான் முதன்முறையாக செட்டில் தொடர்ந்து இருக்க ஆசைபட்டேன்.
சித்திக் சார் ஒரு மூத்த இயக்குனராக இருந்தாலும் அனைவரையும் சமமாக நடத்தினார். அந்த சமயங்களில் அவர் கோபமாகவோ குரலை உயர்த்தியோ நான் பார்த்ததில்லை.
திரைப்படத் தயாரிப்பின் செயல்முறையை ரசிக்க அவர் எனக்குக் கற்றுக் கொடுத்தார். அவருடன் பணிபுரியும் அனுபவத்தை பெற நான் என்றென்றும் விரும்பினேன்.
அவர் தான் என்னிடம் உள்ள தன்னம்பிக்கையும், திறமையையும் நான் கண்டுகொள்ள வழிகாட்டினார். அதன்பிறகு நாங்கள் எங்கு, எப்போது சந்தித்தாலும் எனது குடும்பம் மற்றும் எனது படங்களை பற்றி கவனமுடன் விசாரிப்பார்.
நான் நடிகராக உருவான காலத்தில் என் மீது நீங்கள் வைத்திருந்த நம்பிக்கைக்கு நன்றி சித்திக் சார். நான் உங்களை மிகவும் நேசிக்கிறேன்.
உங்களது மறைவால் வாடும், குடும்பத்தினர், நண்பர்களுக்காக வேண்டிக்கொள்கிறேன்.
சித்திக் சார் நம் அருகில் இல்லை. இருப்பினும், அவர் கொடுத்த நினைவுகளும் அன்பும் வரும் காலங்களில் நாம் முன்னோக்கி சொல்ல உந்துசக்தியாக இருக்கும்” என்று சூர்யா தனது இரங்கலை உருக்கமுடன் தெரிவித்துள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
கைது செய்வதாக மிரட்டும் ஸ்மிருதி இரானி… ஆ.ராசா புகார்!