கொரோனா தொற்று காரணமாக உயர்த்தப்பட்டிருந்த ரயில்வே நடைமேடை டிக்கெட் கட்டணம்,மீண்டும் ரூ.10 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகமாக பரவி வந்த நிலையில் மக்கள் அதிகம் கூட கூடிய இடங்களுக்கு செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் ரயில் நிலையங்களில் பயணம் செய்வோர் தவிர, மற்றவர்கள் அதிகளவில் கூடுவதை தவிர்க்கும் வகையில் நடைமேடை டிக்கெட் வழங்குவது நிறுத்தப்பட்டது. பின்னர் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று கடந்த ஏப்ரல் மாதம் முதல் சென்னை ரயில்வே கோட்டத்திற்குட்பட்ட ரயில் நிலையங்களில் நடைமேடை டிக்கெட் கட்டணம் ரூ.10லிருந்து ரூ.50ஆக உயர்த்தப்பட்டது. இந்த கட்டுப்பாடு நல்ல பயன் அளித்தது.
தற்போது கொரோனா தொற்று குறைந்து வருவதால் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில், ரயில் நிலையங்களில் நடைமேடை கட்டணம் மீண்டும் ரூ.10ஆக குறைக்கப்பட்டுள்ளது.
சென்னை ரயில்வே கோட்டத்திற்குட்பட்ட சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, அரக்கோணம், காட்பாடி ஆகிய ரயில் நிலையங்களில் ரூ.50 ஆக இருந்த நடைமேடை கட்டணம் மீண்டும் ரூ.10ஆக குறைக்கப்பட்டுள்ளது.
அதுபோன்று மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் ரயில் நிலையம், தாதர், லோகமான்ய திலக் டெர்மினஸ், தானே, கல்யாண் மற்றும் பன்வெல் ஆகிய மும்பை ரயில் நிலையங்களில் நடைமேடை டிக்கெட் கட்டணம் 10 ரூபாய் ஆக குறைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மதுரை எம்பி சு.வெங்கடேசன், கொரோனா காலத்தில் ரயில்வே நடைமேடை கட்டணம் ரூ.50 ஆக உயர்த்தப்பட்டதை குறைக்க வேண்டுமென வலியுறுத்தி வந்தேன். மீண்டும் ரூ.10 ஆக குறைக்கப்பட்டுள்ளதை வரவேற்கிறேன். அதற்கென தனி கவுண்டர் துவக்கப்பட வேண்டும்” என்று கோரிக்கை வைத்துள்ளார்.
**-வினிதா**
�,