கனமழை காரணமாக , நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதால் நீலகிரிக்கு வரும் 16ஆம் தேதிவரை செல்ல வேண்டாம் என்று பேரிடர் மேலாண்மைத் துறை அறிவுறுத்தியுள்ளது.
குறைந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக பெய்து வந்த கனமழை சற்று நின்றிருந்தாலும், அதனால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் பாதிப்புகள் அப்படியேதான் இருக்கிறது. மீட்பு மற்றும் தண்ணீரை அகற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது.
இந்நிலையில் மீண்டும் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகவுள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடையே பேசும்போது,” காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வட தமிழ்நாடு பகுதிகளில் நேற்று கரையைக் கடந்தது. தற்போது அது வலுவிழந்து காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வட உள் தமிழ்நாடு, அதனை ஒட்டியுள்ள பகுதியில் நிலவுகிறது.
நாளை (நவம்பர் 13) தெற்கு அந்தமான், அதனை ஒட்டியுள்ள பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகக் கூடும். மேற்கு வடமேற்குத் திசையில் நகர்ந்து 15ஆம் தேதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மத்திய கிழக்கு, அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வலுபெறக்கூடும்.
இதனால், அடுத்து வரும் 24 மணி நேரத்திற்கு கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும். வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, கோவை, திண்டுக்கல், தேனி, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், திருச்சி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்.
நவம்பர் 13ஆம் தேதி வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், திருச்சி, மதுரை, விருதுநகர், தென்காசி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் கனமழையும், பிற மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கும் வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
ஒருசில இடங்களில் லேசனாது முதல் மிதமான மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக அடுத்த நான்கு நாட்களுக்கு மழை பெய்யும்.
கேரள கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 40-50 கி.மீ வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம்.
வடகிழக்குப் பருவமழை இயல்பைவிட 56 விழுக்காடு அதிகமாகப் பதிவாகியுள்ளது. சென்னையில் ஐந்து மடங்கிற்கும் அதிகமாக மழை பெய்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் இன்றுவரை தமிழ்நாட்டில் 491 விழுக்காடு கூடுதலாக மழை பதிவாகியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
**நீலகிரி**
தீவிரமடைந்து வரும் வடகிழக்கு பருவமழையினால் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் நீலகிரி மாவட்டத்தில் நவம்பர் 13,14,15,16 ஆகிய தேதிகளில் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
தொடர் கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு இருப்பதால், நம்பவர் 12ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை நீலகிரிக்கு செல்லும் பயணத்தை மக்கள் தவிர்க்க வேண்டும் என்று மாநில பேரிடர் மேலாண்மை துறை அறிவுறுத்தியுள்ளது.
**-வினிதா**
�,