�
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய 100 பேர் உயிர் தப்பினர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே முட்டல் கிராமத்தில் வனத் துறைக்குச் சொந்தமான வனப்பகுதி மற்றும் மலைப்பகுதி உள்ளது. இங்கு கல்வராயன் மலையில் உற்பத்தியாகும் காட்டாறு, ஆனைவாரி என்னும் இடத்தில் அருவியாகக் கொட்டுகிறது. இந்த இடத்தில் வனத் துறையின் சார்பில், பொதுமக்கள் பாதுகாப்புடன் குளிக்கும் வகையில் தடுப்பு வேலிகள் மற்றும் குடில்கள் அமைக்கப்பட்டுள்ளன.
காந்தி ஜெயந்தியையொட்டி இன்று (அக்டோபர் 2) விடுமுறை என்பதால், 300க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்கச் சென்றனர். மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, அந்தப் பகுதிகளில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இந்த நீர்வீழ்ச்சிக்கு 20கி.மீ. வரை சுற்றிச் செல்ல வேண்டும் என்பதால், அருவியை ஒட்டினாற்போல் உள்ள பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் சென்றனர். ஆத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்றிரவு முதல் பலத்த மழை பெய்து வருவதால் இங்கு வெள்ளம் ஏற்பட்டது.
எதிர்பாராத விதமாக நீர்வீழ்ச்சியில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால், அருவிக்குச் சென்றவர்கள் அங்கிருந்து திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள், சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மழை காரணமாக, அந்த அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. வெள்ளம் அதிகரிக்கும் முன்பே ஆற்றைக் கடந்ததால் 100க்கும் மேற்பட்டோர் உயிர் தப்பியுள்ளனர்.�,