பிரதமர் மோடி, ஒவ்வொரு மாதமும், கடைசி ஞாயிற்றுக்கிழமையில், ‘மன் கி பாத்’ ரேடியோ நிகழ்ச்சி மூலம், மக்களிடம் உரையாடி வருகிறார். இந்நிலையில், 32-வது மன் கி பாத் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை(இன்று) காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலியின் அனைத்து அலைவரிசைகளிலும் ஒலிபரப்பானது.
அப்போது பேசிய அவர், இந்த ஆண்டு கோடையின் வெப்பம் மறக்க முடியாத அனுபவமாக அமைந்திருக்கிறது. அதே வேளையில் நாம் மழையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். நான் இன்று உங்களோடு உரையாடிக் கொண்டிருக்கும் வேளையிலே, ரமலான் புனித மாதம் தொடங்கி விட்டது.
ரமலானின் புனிதமான மாதம் பிறந்திருக்கும் இந்த வேளையில், நான் பாரதத்திலும் உலகெங்கிலும் வாழும் மக்களுக்கு, குறிப்பாக இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த மக்களுக்கு, என் மனம் நிறைந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கடந்த முறை நான் மனதின் குரலை வெளிப்படுத்திய போது, நான் ஒரு சொல்லைப் பயன்படுத்தி இருந்தேன், இதைக் குறிப்பாக இளைஞர்கள் குறித்து கையாண்டிருந்தேன்; ஏதாவது ஒன்றைப் புதிதாகச் செய்யுங்கள், comfort zone என்ற சொகுசு வட்டத்தை விட்டு வெளியே வாருங்கள், புதிய அனுபவங்களைப் பெறுங்கள், இந்த வயதில் தான் உங்களால் வாழ்க்கையை இப்படி வாழ முடியும், சற்று அபாயங்களை எதிர்கொள்ளுங்கள், இடர்ப்பாடுகளை சந்தியுங்கள் என்று கூறியிருந்தேன்.
ஏராளமானவர்கள் தங்கள் பின்னூட்டங்களைப் பதிவு செய்திருக்கிறார்கள் என்பது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. தனிப்பட்ட முறையில் தங்கள் அனுபவங்களைப் பற்றி என்னிடம் உற்சாகத்தோடு பகிர்ந்து கொள்ள அனைவருமே விரும்பியிருக்கிறார்கள். என்னால் ஒவ்வொரு விஷயத்தையும் படிக்க முடியவில்லை, ஒவ்வொருவர் அனுப்பியிருக்கும் செய்தியையும் என்னால் கேட்க முடியவில்லை, ஏனென்றால் அந்த அளவுக்கு வந்து குவிந்திருக்கிறன.
சுதந்திர போராட்டத்தின் போது இந்தியாவுக்காக இளைஞர்கள் தூக்கு தண்டனையை ஏற்று கொண்டனர். சுதந்திர போராட்ட வீரர்கள் எவ்வாறு துன்பப்பட்டனர் என்பதை இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். ஜூன் 5ம் தேதி உலக சுற்றுலா தினம். இந்த வருடம் இதனை, மக்களை இயற்கையுடன் இணைக்க வேண்டும் விழாவாக கொண்டாட வேண்டும் என ஐ.நா., கூறியுள்ளது. இதற்காக சர்வதேச அளவில் பிரசாரம் நடக்கும் போது, நமது தனிப்பட்ட இயக்கமாகவும் இது மாற வேண்டும்.
இயற்கை நமக்கு சிறப்பு சக்தியை அளித்துள்ளது. நமது உடல் 5 அடிப்படை பஞ்ச பூதங்களால் ஆனது. இதனுடன் நாம் தொடர்பு கொள்ளும் போது, நமக்கு புதிய சக்தி கிடைக்கிறது. சுற்றுச்சூழலை நாம் பாதுகாத்தால், அதன் பலனை நமது தலைமுறை அனுபவிக்கும். பூமி மற்றும் சுற்றுச்சூழலை, சக்தியின் அடிப்படையாக வேதங்கள் குறிப்பிடுகின்றன.
இந்தியாவில் பூமி தான் தாய் நான் அதன் மகன் என அனைவரும் சொல்கின்றனர். புத்தர் பிறப்பு, ஞானம் பெற்றது, முக்தி அடைந்தது அனைத்தும் மரத்தின் கீழ் நடந்தது. இயற்கை மீதான அன்பை வெளிப்படுத்தவும், இயற்கையை வழிபடவும் நம் நாட்டில் ஏராளமான விழாக்கள் வழிபாடுகள் உள்ளன. ஒவ்வொரு மாநிலத்திலும் மரம் நடுதல் பெரிய அளவில் நடந்து வருகிறது.
ஜூன் மாதம் 21 ஆம் தேதி என்பது உலகம் முழுக்க நன்கு அடையாளம் தெரிந்து கொள்ளும் நாளாக ஆகி இருக்கிறது. உலக யோகக்கலை நாள் என்ற வகையில் உலகத்தார் அனைவரும் இதைக் கொண்டாடுகிறார்கள். ஜூன் மாதம் 21ஆம் தேதி மிகக் குறுகிய காலகட்டதிலேயே உலக யோகக்கலை நாள் என்ற வகையில் உலகின் மூலைமுடுக்கெங்கும் பரவியிருக்கிறது, இது உலக மக்களை இணைக்கிறது.
ஒருபுறம் உலகில் பிரிவினைவாத சக்திகள் தங்களின் மோசமான முகத்தைக் காட்டிக் கொண்டிருக்கும் வேளையில், உலகிற்கு பாரதம் அளித்திருக்கும் மிகப்பெரிய கொடை யோகக்கலை. யோகக்கலை வாயிலாக நம்மால் உலகை ஓரிழையில் இணைக்க முடியும். யோகம் என்பது எப்படி உடல், மனம், புத்தி, ஆன்மா ஆகியவற்றை இணைக்கிறதோ, அதே போல யோகத்தால் உலகையும் இணைக்க இயலும்.
கடந்த ஆண்டு நான் யோகக்கலை தொடர்பான சில போட்டிகளையும், சில பரிசுகளையும் அறிவித்திருந்தேன். மெல்ல மெல்ல இந்தத் திசையில் பணிகள் முன்னேறி வருகின்றன. எனக்கு ஆலோசனை அளிக்கப்பட்டிருக்கிறது, இந்த அடிப்படையான ஆலோசனை அளித்தவருக்கு நான் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மகளுடன் செல்ஃபி என்ற இயக்கத்தை எப்படி நாம் முன்னர் நடத்தி, அது சுவாரசியமான அனுபவமாக அமைந்ததோ, அதே போல இணைந்து யோகம் செய்யும் 3 தலைமுறையினரைப் படம் பிடியுங்கள், இது நாட்டுக்கும், உலகுக்கும் ஆர்வத்தை, உற்சாகத்தை ஏற்படுத்தும்.
நீங்கள் அவசியம் NarendraModiAppஇல், MyGovஇல் 3 தலைமுறையினர் எங்கெல்லாம் யோகம் செய்கிறார்களோ, அந்த தலைமுறையினரை ஒன்றாகப் படம்பிடித்து எனக்கு அனுப்பி வையுங்கள். நேற்று, இன்று, நாளையின் படமாக இது அமையும். இது ஒளிமயமான எதிர்காலத்துக்கான உத்தரவாதத்தை அளிக்கும். உங்கள் அனைவருக்கும் நான் அழைப்பு விடுக்கிறேன் என்று அவர் தெரிவித்தார்.�,