சேலத்தின் முதல் பெண் ஆட்சியராகப் பொறுப்பேற்ற நாள் முதலே ஆட்சியர் ரோகிணி மக்கள் மனதில் இடம் பிடிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.
மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் ஆட்சியர் ரோகிணி தரையில் அமர்ந்து மாற்றுத்திறனாளிகளின் குறைகள் கேட்டறிவது, ஆட்சியர் அலுவலகத்துக்கு வரும் மக்களிடம் அன்பாக நடந்து கொள்வது என மக்களோடு மக்களாய் கலந்து பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் நேற்று(செப்,7) சேலம் மாவட்டம் தம்மம்பட்டி, மல்லியகரை உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று டெங்கு ஒழிப்பு பணிகள் மற்றும் அரசின் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு நடத்தினார். பின்னர் ஆத்தூர் அருகே கருத்தராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் ஆய்வு நடத்தினார்.
அப்போது அப்பள்ளியின் ஆசிரியர்கள் ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் கலந்து கொள்ள சென்றது தெரியவந்தது. பின்னர் அங்கு ஆசிரியர் இல்லாததால் அவரே பாடம் நடத்தியுள்ளார். சுமார் ஒரு மணி நேரம் பாடம் நடத்திய பிறகு மாணவர்களின் வருங்கால திட்டங்கள் குறித்துக் கேட்டறிந்தார். இந்தச் சம்பவம் பெற்றோர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதைத்தொடர்ந்து வகுப்பிற்கு வராத ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டு நடவடிக்கை எடுக்குமாறு கல்வி துறைக்கு உத்தரவிட்டார். இவர் டெங்குவில் இருந்து மக்களைக் காக்கவும், ப்ளூவேல் விளையாட்டு விளையாடுபவர்களை மீட்கவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
சுகாதாரம், கல்வி அறிவு, வேலைவாய்ப்பு என அனைத்திலும் தன்னிறைவு பெற்ற முன்மாதிரி மாவட்டமாக மாற்றுவதற்கான எல்லா முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்று அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.�,