தரமணி படத்தைத் தொடர்ந்து க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவாகும் புதிய படத்தில் நடிகை ஆண்ட்ரியா கதையின் நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார்.
சவாலான கதாபாத்திரங்களையும் வித்தியாசமான திரைக்கதைகளையும் தேர்வு செய்து நடித்துவருபவர் ஆண்ட்ரியா. இவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான தரமணி திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது இந்தப் படம் தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியாகவுள்ளது. இந்நிலையில் ஆண்ட்ரியா புதிய படமொன்றில் நடிக்கிறார்.
இயக்குநர் நாஞ்சில் இயக்கத்தில் உருவாகவுள்ள இப்படத்திற்கு ‘கா’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. கா என்றால் செந்தமிழில் காடு, கானகம் என்று அர்த்தம். முழுக்க முழுக்க காட்டை மையப்படுத்திக் கதை உருவாக்கப்பட்டுள்ளதால் ‘கா’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இந்தப் படத்தில் ஆண்ட்ரியா கதாநாயகியாக நடிக்கிறார். படத்தின் திரைக்கதை முழுக்க முழுக்க கதாநாயகியை முன்னிலைப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.
கொடிய மிருகங்கள் வாழும் காட்டுப் பகுதிகளுக்குச் சென்று அவற்றின் வாழ்க்கை முறைகளையும் மற்றும் குணாதிசயங்களையும் பதிவு செய்யும் வைல்ட் லைப் போட்டோகிராபர் கதாபாத்திரத்தில் ஆண்ட்ரியா நடிக்கிறார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் இளவரசு, சலீம் கவுஸ் ஆகியோர் நடிக்கிறார்கள்.
ஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றனர். அம்ரிஷ் இசையமைப்பில் அறிவழகன் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். கோபி கிருஷ்ணா படத்தொகுப்பு செய்கிறார். இப்படத்தின் [போஸ்டர்](https://twitter.com/andrea_jeremiah/status/990468606411472897) தற்போது வெளியாகியுள்ளது.
க்ரைம் த்ரில்லர் படமாக உருவாக உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் அந்தமான், மூணார், மேற்குத் தொடர்ச்சி மலைகள் போன்ற இடங்களில் நடைபெற உள்ளது.
�,”