தமிழகத்தில் காப்பகங்களில் உள்ள குழந்தைகளுக்கு கொரோனா தொற்று இல்லை என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னை ராயபுரத்தில் உள்ள அரசு குழந்தைகள் காப்பகத்தில் தங்கியிருந்த 35 குழந்தைகளுக்குக் கடந்த மாதம் தொற்று உறுதி செய்யப்பட்டது. முதலில் காப்பக வார்டனுக்கு தொற்று ஏற்பட்டதால் குழந்தைகளுக்குப் பரவியதாகத் தகவல் வெளியானது. இது தொடர்பான செய்தி ஊடகங்களில் வெளியான நிலையில் குழந்தைகளுக்குத் தொற்று பரவியது குறித்து உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்தது.
கடந்த ஜூன் 11ஆம் தேதி நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது, காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கு வைரஸ் தொற்று பரவியது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யத் தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதுபோன்று நாடு முழுவதும் காப்பகங்களில் இருக்கும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து அனைத்து மாநிலங்களும் பதிலளிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.
இந்த வழக்கில் ஜூன் 15ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்த தமிழக அரசு, காப்பகத்தில் உள்ள குழந்தைகளை வெளியிலிருந்து பார்க்கப் பலர் வந்து சென்றதால் தொற்று ஏற்பட்டதாகவும், இதையடுத்து அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கு மீண்டும் இன்று (ஜூலை 7 ) விசாரணைக்கு வந்த நிலையில், ராயபுரம் காப்பகத்தில் தொற்று ஏற்பட்ட 35 குழந்தைகளும் குணமாகிவிட்டதாகத் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. அதோடு ராயபுரம் காப்பகத்தில் புதிதாக வைரஸ் தொற்று யாருக்கும் ஏற்படவில்லை. தமிழகத்தில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் தங்கியிருக்கும் எந்த ஒரு குழந்தைக்கும் கொரோனா தொற்று இல்லை என்று தமிழக அரசு கூறியுள்ளது.
இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் உள்ள காப்பகங்களில் தங்கியிருக்கும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்துப் பதிலளிக்க அந்தந்த மாநிலங்களுக்கு உத்தரவிட்டதுடன் வழக்கை வரும் ஜூலை 12 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது.
**-கவிபிரியா**�,