பாமகவுடன் கூட்டணி அமைத்ததன் மூலம் ஜெயலலிதாவுக்கு எதிரான நிலைப்பாட்டை அதிமுக எடுத்திருக்கிறது என்று விசிக தலைவர் திருமாவளவன் விமர்சனம் செய்துள்ளார்.
திமுக-அதிமுக என இரண்டு கட்சிகளுடனும் கூட்டணி தொடர்பாக பாமக மறைமுக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவந்ததாக கூறப்பட்ட நிலையில், இன்று (பிப்ரவரி 19) அதிமுக கூட்டணியில் பாமக இணைந்தது. இதுவரை அதிமுகவை கடுமையாக விமர்சித்துவந்த பாமக, அதிமுக அரசின் ஊழல் பட்டியல்கள் என ஆளுநரிடமே புகார் அளித்த பாமக, தற்போது அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளது என்று எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்துவருகின்றன.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், “அதிமுகவுடன் பாமக கைகோர்த்திருப்பது தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு கூடுதல் சாதகமாக அமையும். கூட்டணி அமைப்பதற்காக பாமக எப்படிபட்ட உத்தியை கையாண்டுள்ளது என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். தொகுதி பங்கீடு மட்டுமல்லாமல் வேறு என்ன வகையான பேரங்கள் நடத்தினர் என்பது சமூக ஊடகங்களில் ஒரு வாரகாலத்தில் பதிவாகியுள்ளது” என்று தெரிவித்தார்.
“பாமக எந்தக் கூட்டணியில் இணைந்தாலும் அக்கூட்டணிக்கு வெற்றிவாய்ப்பு என்பது ஒரு மாயைதான் என்பதை 2009 மக்களவைத் தேர்தல் உறுதிப்படுத்தியது. அதன்பிறகு பாமகவுடன் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டை எடுத்த ஜெயலலிதா, சட்டமன்றத்திலேயே பாமகவின் உண்மை முகத்தை தோலுறித்துக் காட்டினார்” என்று குறிப்பிட்ட திருமாவளவன், பாமகவை கூட்டணியில் சேர்த்ததன் மூலம் ஜெயலலிதாவுக்கு எதிரான நிலைப்பாட்டை அதிமுக எடுத்துள்ளது என்றும் விமர்சித்தார்.
�,