�
2016ஆம் ஆண்டில் ரெரா சட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகு இந்தியாவின் ரியல் எஸ்டேட் துறை ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய வீடமைப்பு மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சரான ஹர்தீப் சிங் புரி, புனேவில் நடந்த *ரெரா* பிராந்திய பணிமனையில் பேசுகையில், “இந்தியா சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளாக ரியல் எஸ்டேட் துறைக்கென்று பிரத்தியேகமாக ஒழுங்குமுறை ஆணையம் எதுவும் இல்லை. 2016ஆம் ஆண்டில்தான் ரியல் எஸ்டேட் விதிமுறைகள் மற்றும் மேம்பாட்டுச் சட்டம் (ரெரா சட்டம்) அரசால் அமல்படுத்தப்பட்டது. இந்த ஆண்டுக்குப் பிறகு ரியல் எஸ்டேட் துறை முற்றிலும் மாறியுள்ளது. இத்துறையில் நம்பிக்கை, விதிமுறைகள் உள்ளிட்ட அனைத்தும் ரெரா சட்டத்தால் ஊக்கம்பெற்றுள்ளன.
ரெரா அமல்படுத்தப்பட்ட பிறகு, முக்கியமாக வீடு வாங்குபவர்களிடையே டெவலப்பர்ஸ் மீதான நம்பிக்கை அதிகரித்துள்ளது. 10 அல்லது 20 ஆண்டுகளுக்கு முன்னரே ரியல் எஸ்டேட் சட்டம் அமலுக்கு வந்திருந்தால் வீடு வாங்குபவர்கள் நீதித்துறையையே நாடியிருக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு இச்சட்டம் ரியல் எஸ்டேட் துறையை ஒழுங்குபடுத்தியுள்ளது. இதனால் வீடு வாங்குபவர்களுக்கான சிறப்பான சூழல் அமைக்கப்பட்டுள்ளதோடு, நேர்மையாக வரி செலுத்துவோரின் வாழ்க்கையிலும் சிறந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது” என்றார். இப்பணிமனையில் ரியல் எஸ்டேட் துறையைச் சேர்ந்த பல்வேறு பங்குதாரர்கள், வீடு வாங்குபவர்கள், டெவலப்பர்ஸ், நிதி நிறுவனங்களைச் சேர்ந்த பலரும் கலந்துகொண்டனர்.�,