�
கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் நாடு முழுவதும் ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ரத்து செய்யப்பட்ட ரயில் சேவை மீண்டும் ஜூன் 1ஆம் தேதி முதல் குறிப்பிட்ட அளவில் இயக்கப்பட்டு வந்தது. அனைத்து வழித்தடங்களிலும் 200 பயணிகள் ரயில்களும், புலம் பெயர் தொழிலாளர்களுக்காகச் சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டு வந்தன.
இந்த சூழலில் மீண்டும் ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் தற்போது அட்டவணைப்படி இயக்கப்பட்டு வரும் விரைவு ரயில்கள், பயணிகள் ரயில்கள், புறநகர் ரயில்கள் ஆகியவை வரும் ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.
அதன்படி, முன்பதிவு செய்யப்பட்ட பயணிகளுக்கான கட்டணம் முழுவதும் திரும்பச் செலுத்தப்படும். ஜூலை 1 முதல் ஆகஸ்ட் மாதம் 12ஆம் தேதி வரைலான அனைத்து முன் பதிவுகளும் ரத்து செய்யப்படுகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் புலம் பெயர் தொழிலாளர்களுக்கான சிறப்பு ரயில்கள் மட்டும் தொடர்ந்து இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதில் தமிழ்நாடு , மகாராஷ்டிரா, டெல்லி ஆகிய மாநிலங்களில் பாதிப்பு அதிகமாக உள்ளது. இதில் விமானம் மற்றும் ரயில்களில் பயணிப்பவர்களுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டு வரும் நிலையில், பயணிகள் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
**-கவிபிரியா**�,