2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் எண்ணம் இல்லை என்றும் தனது பேரன் தேர்தலில் போட்டியிடுவார் என்றும் முன்னாள் பிரதமர் தேவகௌடா தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமரும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவருமான தேவகௌடா தனது குடும்பத்தாருடன் ஹோலி நரசிபுரா தாலுகாவில் உள்ள ஈஸ்வரன் கோயிலில் நேற்று (ஆகஸ்ட் 13) நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலந்துகொண்டார். தேவகௌடாவின் மகனும் கர்நாடக முதல்வருமான குமாரசாமியும் பூஜையில் கலந்துகொண்டார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தேவகௌடா, “குமாரசாமி தேசிய அரசியலுக்குச் செல்ல வாய்ப்புள்ளது. எனினும் அவசரம் ஒன்றும் இல்லை, அவருக்கு நீண்ட அரசியல் வாழ்க்கை உள்ளது” என்று குறிப்பிட்டார். 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு வந்தால், ராகுல் காந்தி பிரதமராவதற்கு தனது கட்சி ஆதரவளிக்கும் எனத் தெரிவித்த தேவகௌடா, “அடுத்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட எனக்கு எண்ணமில்லை. எனது பேரன் பிரஜ்வால் ரேவண்ணாவிடம் போட்டியிடும்படி கூறியுள்ளேன். அவர் போட்டியிடவில்லை என்றால், நான் போட்டியிடுவேன்” என்றும் கூறியுள்ளார்.
கர்நாடகாவில் கூட்டணி ஆட்சி தொடரும் என்றும் கூட்டணியைத் தொந்தரவு செய்ய வாய்ப்பு இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
முன்னதாக, நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 12) நடைபெற்ற புத்தக வெளியிட்டு விழா ஒன்றில் கலந்துகொண்ட தேவகௌடா, நேரு இருந்த காலம் வரை காங்கிரஸ் கட்சி தனிப்பெரும் அரசியல் அதிகாரம் பெற்ற கட்சியாகத் திகழ்ந்ததாகவும் பிராந்திய கட்சிகள் மற்றும் சாதி ரீதியான கட்சிகள் வளர்ச்சியால் காங்கிரஸ் பலவீனமானதாக மாறிவிட்டது என்றும் தெரிவித்திருந்தார்.�,