நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் அறிவிப்பு வேடிக்கையாக உள்ளது என்றும், சினிமா நடிகர்களால் ஊழலை ஒழிக்க முடியாது என்றும் கருத்து தெரிவித்துள்ளார் பாஜகவைச் சேர்ந்த சுப்பிரமணியன் சுவாமி.
நடிகர் ரஜினிகாந்த், இன்று (டிசம்பர் 31) தனது அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார். அடுத்து வரவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் தமிழகச் சட்டமன்றத் தேர்தலைக் குறிவைத்து இயங்கப் போவதாகவும், தனித்து போட்டியிடப் போவதாகவும் அவர் தெரிவித்தார்.
ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு எதிரான கருத்தை வெளிப்படுத்தி இருக்கிறார் பாஜகவைச் சேர்ந்த சுப்பிரமணியன் சுவாமி. “இன்னொரு சினிமா நடிகர் அரசியலுக்கு வந்திருக்கிறார். அரசியலுக்கு வருவேன் என்று சொல்லி வந்தவர், தமிழ்நாட்டின் நலனுக்காக யோசிப்பேன் என்றும், ஊழலை ஒழிப்பேன் என்றும் சொல்லியிருக்கிறார்.
இதுவரை அவர் என்ன சிந்தித்திருக்கிறார். அவர் படிப்பறிவு இல்லாதவர். ஊடகங்கள்தான் அவரை பெரிதாகக் காட்டுகின்றன. அவரது பேச்சைப் பொருட்படுத்த வேண்டாம். ரஜினிகாந்த் ஒரே நிலைப்பாட்டுடன் என்றுமே இருந்ததில்லை” என்று விமர்சனம் செய்திருக்கிறார் சுப்பிரமணியன் சுவாமி.
மேலும், “ரஜினிகாந்த் அரசியல் அறிவிப்பு வேடிக்கையாக உள்ளது. சினிமா நடிகர்களால் ஊழலை ஒழிக்க முடியாது. சிவாஜி கணேசனுக்கு என்ன நேர்ந்தது என்பது அனைவரும் அறிந்தது. என் எதிர்ப்பையும் மீறி பாஜக ரஜினியுடன் கூட்டணி வைத்தால், வேறு மாநிலத்துக்குச் சென்று அரசியல் செய்வேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழக மக்கள் நினைத்தால் தமிழக அரசியல் தலையெழுத்தை மாற்றிவிடுவார்கள் என்றும், ஆர்.கே.நகர் தேர்தல் முடிவே அதற்குச் சாட்சி என்றும் கூறியிருக்கிறார் சு.சுவாமி.
�,