காய்கறி மற்றும் பழங்களை விமானம் வாயிலாகப் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும்போது அதிகச் செலவு ஏற்படுவதால் செலவைக் குறைக்கும் நடவடிக்கையில் உணவுப் பொருள்கள் ஏற்றுமதி மேம்பாட்டு வாரியம் நீர்வழிப் போக்குவரத்தைக் கையாளத் தொடங்கியுள்ளது.
ஏற்றுமதியில் ஆகும் அதிகச் செலவுகளைக் குறைக்க உணவுப் பொருள்கள் ஏற்றுமதி மேம்பாட்டு வாரியம் தேவையான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. அதன்படி, சமீபத்தில் கொச்சியிலிருந்து 10 டன் அளவிலான வாழைப்பழங்களைக் கப்பல் வழியாக துபாய்க்கு ஏற்றுமதி செய்துள்ளது. இதன்மூலம் விமானம் வாயிலாக ஏற்றுமதி செய்யும்போது ஏற்படும் செலவில் ஆறு மடங்கு குறைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து உணவுப் பொருள்கள் ஏற்றுமதி மேம்பாட்டு வாரியத்தின் தலைவரான டி.கே.சிங் கூறுகையில், “வாழைப்பழங்களைக் கப்பல் வாயிலாக ஏற்றுமதி செய்து புதிய முயற்சியை நாங்கள் மேற்கொண்டுள்ளோம். கடந்த வாரத்தில் மட்டும் 10 டன் வாழைப்பழங்களை துபாய்க்கு ஏற்றுமதி செய்துள்ளோம்.
கப்பல் வாயிலாக ஏற்றுமதி செய்யும்போது ஒரு கிலோவுக்கு 10 ரூபாய் மட்டுமே செலவாகிறது. ஆனால், விமானம் வாயிலாக ஏற்றுமதி செய்யும்போது ஒரு கிலோவுக்கு 60 ரூபாய் செலவாகும். அடுத்தகட்டமாகக் குறிப்பிட்ட அளவு வாழைப்பழங்களை ஏற்றுமதி செய்யவுள்ளோம். பிறகு, பிற காய்கறிகள் மற்றும் பழங்களையும் இதுபோல ஏற்றுமதி செய்ய முடிவெடுத்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.
உணவுப் பொருள்கள் ஏற்றுமதி மேம்பாட்டு வாரிய அறிக்கையின்படி, கடந்த 2015-16 நிதியாண்டில் பழங்கள் ஏற்றுமதி 40 சதவிகித உயர்வுடன் 7,98,755 டன் அளவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், 2016-17 நிதியாண்டில் பழங்கள் ஏற்றுமதி 1,65,103 டன்னாக மட்டுமே இருந்துள்ளது.�,