Sதமிழகத்தில் 702 பறக்கும் படைகள் !

Published On:

| By Balaji

தமிழகத்தில் 80 வயதுக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் ஏறத்தாழ 13 லட்சம் பேர் உள்ளனர் என்றும் மாநிலம் முழுவதும் 702 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்தார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் என்று இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வரும் நிலையில், தேர்தல் ஆணையம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து அதனைத் தீவிரமாகக் கண்காணித்து வருகிறது.

தேர்தல் பணிகள் விறுவிறுப்படைந்து உள்ள நிலையில் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, தமிழகத்தில் 80 வயதுக்கு மேல் 12.91 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். அதிகபட்சமாகச் சென்னையில் 1,08,718 வாக்காளர்களும், குறைந்தபட்சமாக நீலகிரியில் 8,253 வாக்காளர்களும் உள்ளனர் என்று தெரிவித்தார்.

தமிழகத்தில் , 3,08,38,473 ஆண் வாக்காளர்கள், 3,18,28,727 பெண் வாக்காளர்கள், 7,246 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தமாக 6,26,73,446 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தலை ஒட்டி ஒரு சட்டமன்றத் தொகுதிக்கும் 3 பறக்கும் படை மற்றும் 3 நிலையான கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி 234 தொகுதிகளுக்கும் தலா 702 பறக்கும் படைகள், நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு சட்டமன்ற தொகுதிக்கு ஒரு வீடியோ குழுவும் நியமனம் செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் பணிக்காக 330 கம்பெனி துணை ராணுவப் படையினரைக் கேட்டுள்ளோம். முதற்கட்டமாக 45- கம்பெனி துணை ராணுவப் படையினர் தமிழகத்துக்கு வந்துள்ளனர்.

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் நிலையில் அரசு மற்றும் பொது இடங்களில் 61 ஆயிரம் போஸ்டர், பேனர்கள் நீக்கப்பட்டுள்ளது. தனியார் இடங்களில் 21 ஆயிரம் போஸ்டர்கள் நீக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மொத்தம் 46 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.

மேலும் மறைந்த தலைவர்களின் சிலைகள் மறைக்கப்பட வேண்டிய அவசியமில்லை என்று குறிப்பிட்ட அவர் 80 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகளுக்குத் தபால் வாக்கு மூலம் வாக்களிப்பதற்கு வசதியாக அவரவர் வீடுகளுக்கே சென்று அதிகாரிகள் அறிவுறுத்துவார்கள். 12டி படிவம் பூர்த்தி செய்பவர்கள் தபால் வாக்குகள் அளிக்கலாம் என்றும் கூறினார்.

**பிரியா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share