நாட்டில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருவதாக ஒன்றிய சுகாதார அமைச்சக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் அக்டோபர்-டிசம்பரில் மூன்றாம் அலை ஏற்பட வாய்ப்புள்ளதால், மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்து வருகின்றனர்.
இன்று (அக்டோபர் 3) ஒன்றிய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ் இதுவரை 90.51 கோடி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 22,842 பேருக்குப் புதிதாகத் தொற்று ஏற்பட்டுள்ளது. நாட்டில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களின் சதவீதம் மொத்த பாதிப்பில் 1 சதவீதத்துக்கும் கீழ் குறைந்து தற்போது 0.80 சதவீதமாக உள்ளது. கடந்த 2020 மார்ச் மாதம் முதல், இது மிகக் குறைந்த அளவு. கொரோனா சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 2,70,557ஆக உள்ளது.
குணமடைந்தோர் வீதம் தற்போது 97.87 சதவீதமாக உள்ளது. கடந்த 2020 மார்ச் முதல் தற்போது குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகும். இதுவரை மொத்த 3,30,94,529 பேர் குணமடைந்துள்ளனர். வாராந்திர பாதிப்பு வீதம் கடந்த 100 நாட்களாக 3 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது. தினசரி பாதிப்பு வீதம் கடந்த 34 நாட்களில் 3 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிப்பு குறைந்து வந்தாலும் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று மருத்துவ வல்லுநர்கள் கூறுகின்றனர். எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா கூறுகையில், “ தொற்றுநோயிலிருந்து விடுபட ஒரே வழி 12-18 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடுவதாகும். அடுத்து பண்டிகை காலங்கள் வர இருப்பதால், அடுத்த 6-8 வாரங்களுக்கு கொரோனா தடுப்பு விதிமுறைகளைப் பொதுமக்கள் கடைப்பிடித்து விழிப்புடனும், எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும்” என்று அறிவுறுத்தியுள்ளார்.
**-பிரியா**
�,