10 லட்சம் மதிப்பிலான ‘சில்ரன் பாங்க் ஆப் இந்தியா’ என அச்சடிக்கப்பட்ட நோட்டுகளை டெபாசிட் செய்ய முயன்றவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
டெல்லியின் சங்கம் விகார் பகுதியில் உள்ள எஸ்பிஐ வங்கி ஏடிஎம்யிலிருந்து கடந்த மாதம் 6 ஆம் தேதி குழந்தைகள் விளையாடப் பயன்படுத்தும் போலி 2000 ரூபாய் நோட்டுகள் வந்தது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் டெல்லியின் அமர் காலணியில் எஸ்.பி.ஐ. வங்கி ஏடிஎம்மில் மீண்டும் சில்ரன் பாங்க் ஆப் இந்தியா என்று அச்சிடப்பட்ட நோட்டுக்கள் வந்து மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் ஹைதராபாத் ஏஎஸ் ராவ் நகரில் அலஹாபாத் வங்கியில் ரூ. 9.90லட்சம் மதிப்பிலான சில்ரன் பாங்க் ஆப் இந்தியா என அச்சிடப்பட்ட போலி ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்ய முயற்சித்த மவுலா – அலி பகுதியை சேர்ந்த யாசுப் சாய்க் என்பவரை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். இவர் நேற்று காலை 10 மணியளவில் வங்கிக்கு சென்று தனது சேமிப்பு கணக்கில் டெபாசிட் செய்ய வேண்டும் என ரூ. 9.90 லட்சம் மதிப்பிலான போலி ரூபாய் நோட்டுகளை கொடுத்துள்ளார். இதில். 400 போலி 2000 ரூபாய் நோட்டுகளும், 380 போலி 500 ரூபாய் நோட்டுகளும் இருந்துள்ளது.
அதாவது டெபாசிட் செய்யவிருந்த பணக் கட்டுகளில் மேல் உள்ள நோட்டுகளை மட்டும் புதிய ரூபாய் நோட்டுகளாக வைத்துவிட்டு உள்ளே சில்ரன் பாங்க் ஆப் இந்தியா என அச்சிடப்பட்ட நோட்டுகளை வைத்துள்ளார்.
இதைக் கண்ட காசாளர் வங்கி மேலாளரிடம் தகவல் தெரிவித்தார் இதனையடுத்து குசைகுடா காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்த காவல்துறையினர் போலி ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்து யாசுப் சாய்க்கை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் சாய்க் மால்காஜ்கிரி பகுதியில் கடை ஒன்றை நடத்தி வருகிறார் என்பதும். வாடிக்கையாளர்களிடம் இருந்து இந்த பணம் கிடைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.�,