கேரளத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் திருச்சூர் வடக்குநாதன் கோவிலும் ஒன்று. இக்கோவிலில் ஆண்டுதோறும் மலையாள மேட மாதத்தின் பூரம் விழா நடைபெறும். இந்த விழாவின் போது நடைபெறும் யானைகளின் அணிவகுப்பு மற்றும் வான வேடிக்கையை காண வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருவார்கள்.
கடந்த 2 ஆண்டுகளாக திருச்சூர் பூரம் விழா பக்தர்களின்றி நடைபெற்றது. இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதால் பக்தர்கள் பங்கேற்புடன் நடக்கிறது. மேலும் வான வேடிக்கை நடத்தவும் கோவில் நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி நாளை மாலை கோவிலில் வானவேடிக்கை நிகழ்ச்சி நடக்கிறது. இதற்கான மாதிரி வானவேடிக்கை நேற்று நடந்தது.
வாண வேடிக்கையை பார்க்க வந்த பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. இந்த முறை திருச்சூர் பூரம் வானவேடிக்கை நிகழ்ச்சியில் திருவம்பாடி தேவஸ்தானத்தின் வானவேடிக்கையை நடத்துவதற்கான ஒப்பந்தத்தை குண்டனூரை சேர்ந்த ஷீனா சுரேஷ் என்ற பெண் பெற்றிருந்தார்.
கோவிலில் இருந்து இப்போதுதான் பெண் ஒருவருக்கு வான வேடிக்கை நடத்தும் ஒப்பந்தம் முதல் முறையாக வழங்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தை பெற்ற ஷீனா சுரேசின் முதல் கணவர் சுந்தரன். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோவிலில் வான வேடிக்கையின்போது நடந்த பட்டாசு விபத்தில் இறந்து விட்டார்.
தற்போது திருச்சூர் பூரம் விழாவில் வாணவேடிக்கை நடத்த ஷீனா மனு செய்திருந்தார். அவரது ஒப்பந்தத்தை கோவில் நிர்வாகம் ஏற்றுக் கொண்டது. இதன்மூலம் கோவிலில் வானவேடிக்கை நடத்தும் முதல் பெண் என்ற பெருமையை ஷீனா பெற்றுள்ளார்.
.