Gதமிழக அரசின் நிர்வாகம் சீர்கெட்டுப் போயிருப்பதாக எதிர்க்கட்சிகள் புகார் சொல்லிக் கொண்டிருக்கும் நிலையில், மத்திய பணியாளர் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின்படி நல்லாட்சிக்கான குறியீட்டுக் கூட்டுத் தரவரிசைப் பட்டியலில் தமிழ்நாடு முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
மகாராஷ்டிரா இரண்டாவது இடமும், கர்நாடகா மூன்றாவது இடமும் பிடித்துள்ளன. சத்தீஸ்கர் நான்காவது இடத்தையும், ஆந்திரா ஐந்தாவது, குஜராத் ஆறாவது, ஹரியானா ஏழாவது, கேரளா எட்டாவது இடத்தையும் பெற்றுள்ளன.
இந்த விருதுக்காக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் மூன்று குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன . பெரிய மாநிலங்கள், வடகிழக்கு மற்றும் மலை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் என மூன்று குழுக்களாக பிரிக்கப்பட்டு இந்த தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு மற்றும் மலை மாநிலப் பிரிவில், இமாச்சலப் பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. யூனியன் பிரதேசங்களில், பாண்டிச்சேரி முதல் இடத்தையும், சண்டிகர், டெல்லி ஆகியவை அடுத்தடுத்த இடங்களையும் பெற்றுள்ளன.
மாநிலங்களில் சட்டம் ஒழுங்கு, பாதுகாப்பு, உள்கட்டமைப்பு ஆகிய துறைகளின் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. விவசாயம், தொழில் ஆகியவையும் இந்தக் கணக்கெடுப்பில் ஆய்வு செய்யப்பட்டன. தேசிய நல்லாட்சி தினம் வாஜ்பாய் பிறந்தநாளான டிசம்பர் 25 ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. அதை ஒட்டி இந்தப் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.�,