தமிழ்நாடு அரசின் முன் மாதிரி கிராம விருது வழங்குவதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
கடந்த சட்டப்பேரவைக் கூட்டத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன், சுகாதாரத்தில் சிறப்பாக செயல்படும் கிராமங்களுக்கு முன் மாதிரி கிராம விருது வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்.
இந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதில், சுகாதாரத்தில் சிறப்பாக செயல்படும் கிராம ஊராட்சிகளை ஊக்குவிக்கும் வகையில், ‘முன் மாதிரி கிராம விருது’ தோற்றுவிக்கப்பட்டு மாவட்டத்திற்கு ஒரு கிராம ஊராட்சி என்ற அடிப்படையில், 37 கிராம ஊராட்சிகளுக்கு ‘முன் மாதிரி கிராம விருது’ வழங்கி கௌரவிக்கப்படும். அதனுடன், விருதிற்கான கேடயமும், தலா ரூ.7.50 லட்சம் பரிசுத்தொகையும் வழங்கப்படும்.
மாவட்ட அளவிலான விருதுகளுடன், சிறப்பாக செயல்படும் மூன்று ஊராட்சிகளுக்கு மாநில அளவில் ‘முன் மாதிரி கிராம விருது’ வழங்கி அதற்கான கேடயமும், தலா ரூ.15 லட்சம் பரிசுத்தொகையும் வழங்கப்படும்.
திடக்கழிவு மேலாண்மை, பிளாஸ்டிக் ஒழிப்பு, சிறப்பு திட்டங்களை செயல்படுத்தும் கிராம ஊராட்சிகளை தேர்ந்தெடுத்து விருது வழங்கப்படும். சிறந்த ஊராட்சிகளை தேர்ந்தெடுக்க மாநில அளவில் ஊரகவளர்ச்சித்துறையின் இயக்குனர் தலைமையிலும், மாவட்ட அளவில் ஆட்சியர் தலைமையிலும் குழு அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
**-வினிதா**
�,