அப்படியே சாப்பிடலாம் என்பதில் தொடங்கி, அறுசுவை உணவாக விதவிதமாக சமைத்து உண்ணலாம் என்பது வரை சமையலறையில் சமய சஞ்சீவினியாக கைகொடுப்பது அவல். இந்த மழைக்கால ரிலாக்ஸ் டைமில் அவல் பக்கோடா செய்து சாப்பிட்டு உடனடி புத்துணர்ச்சி பெறலாம்.
**எப்படிச் செய்வது?**
ஒரு கப் அவலைத் தண்ணீரில் 15 நிமிடங்கள் ஊறவைத்து நீர் இல்லாமல் ஒட்டப் பிழிந்து வாய் அகன்ற பாத்திரத்தில் போட்டுக்கொள்ளவும். அத்துடன் கடலை மாவு அரை கப், நறுக்கிய வெங்காயம் அரை கப், தோலுரித்த நறுக்கிய பூண்டு இரண்டு பற்கள், பெருங்காயத்தூள் ஒரு சிட்டிகை, மஞ்சள்தூள் சிறிதளவு, ஆய்ந்த கறிவேப்பிலை இரண்டு டேபிள்ஸ்பூன், ஆய்ந்த கொத்தமல்லித்தழை இரண்டு டேபிள்ஸ்பூன், தோல் சீவி நறுக்கிய இஞ்சி ஒரு டீஸ்பூன், சோள மாவு ஒரு டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள் ஒரு டீஸ்பூன், சோம்பு ஒரு டீஸ்பூன், வேர்க்கடலைப் பொடி ஒரு டேபிள்ஸ்பூன் உப்பு – தேவையான அளவு சேர்த்து சிறிதளவு தண்ணீர் தெளித்து நன்கு பிசிறிக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் மாவை பக்கோடாக்களாகப் கிள்ளிப்போட்டு பொன்னிறமாகப் பொரித்தெடுத்துப் பரிமாறவும்.
**சிறப்பு**
வளரும் குழந்தைகளுக்கு ஏற்றது. ரத்த சிவப்பணுக்களை அதிகரிக்கும். உடலை உறுதியாக்கும். நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும்.
�,