தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யும் ஆலைகள் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு பாராட்டும், உரிய வெகுமதியும் வழங்கப்படும் என தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் தெரிவித்துள்ளது.
அன்றாட வாழ்க்கையில் பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாமல் இருப்பது கடினமாகிவிட்டது. காலையில் டீ குடிக்கும் பிளாஸ்டிக் கப் முதல் பல்வேறு காரணங்களுக்கு பிளாஸ்டிக் பொருளை பயன்படுத்துகிறோம். பிளாஸ்டிக் பயன்பாட்டினால் ஏற்படும் விளைவுகள் பற்றி நன்கு அறிந்திருந்தும் நம்முடைய செளகரியத்திற்காக பயன்படுத்தி வருகிறோம். பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
ஒரு முறை பயன்படுத்திவிட்டு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களான பிளாஸ்டிக் கோப்பைகள், அனைத்து அளவிலான மற்றும் தடிமன் கொண்ட பிளாஸ்டிக் கைப்பைகள், நெய்யப்படாத பிளாஸ்டிக் கைப்பைகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகிதத் தட்டுகள், பிளாஸ்டிக் டம்ளர்கள், தெர்மாகோல் கோப்பைகள், உணவுப் பொருட்களைக் கட்டப் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தாள்கள், தண்ணீர் பைகள்,பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழல்கள் மற்றும் பிளாஸ்டிக் கொடிகள் போன்றவற்றை தயாரிக்கவும், இருப்பு வைக்கவும், விற்கவும், பயன்படுத்தவும் தடை விதித்து தமிழ்நாடு அரசு கடந்த 2018ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் தேதி அரசாணை வெளியிட்டது. தொடர்ந்து 2019 ஜனவரி 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது.
இதுகுறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பல்வேறு நிகழ்ச்சிகள், பேரணிகள், அறிவிப்பு பதாகைகளை நிறுவுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மாசு கட்டுப்பாடு வாரியம் மேற்கொண்டு வருகிறது.
தற்போது கொரோனா தொற்று காரணமாக பிளாஸ்டிக் தடையை அமல்படுத்துவதில் கவனம் செலுத்தப்படாததால், அதன் பயன்பாடு மீண்டும் அதிகரித்துவிட்டது.
இந்நிலையில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் புகார்களின் அடிப்படையில் மூடப்பட்டு வருகின்றன. இருப்பினும், குடியிருப்பு, வணிக நிறுவனங்களுக்குள் ஒரு சிறிய இடத்தில் சட்டவிரோதமாகச் செயல்படும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் உற்பத்தியாளர்களை அடையாளம் காண்பது கடினமாக உள்ளது. இந்த உற்பத்தியாளர்களில் பெரும்பாலானவர்கள், எந்த அரசுத் துறையிடமும் முறையான பதிவு மற்றும் அனுமதி இல்லாமல் தற்காலிகமாகச் செயல்பட்டு வருகின்றன.
அதனால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழில் நிறுவனங்களுக்கு அருகில் குடியிருப்பவர்கள், சட்டவிரோதமாக இயங்கும் அத்தொழிற்சாலைகள் குறித்த தகவலை தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்திற்குத் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புகார்களைத் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் அந்தந்த மாவட்டச் சுற்றுச்சூழல் பொறியாளர்களிடம் தெரிவிக்கலாம். அவர்களுடைய தொடர்பு விவரங்கள் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் [இணையதளத்தில்](https://tnpcb.gov.in/contact.php)கொடுக்கப்பட்டுள்ளன.புகார் அளிப்பவர்கள் தங்கள் பெயர், முகவரி மற்றும் தொலைபேசி எண் முதலியவற்றை அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதன் மூலம் உண்மைக்குப் புறம்பான தகவல்களைக் கொடுப்பதைத் தடுக்க முடியும். அதேசமயம் தகவல் தெரிவிப்பவர்களின் விவரங்களும் பாதுகாக்கப்படும்.
மேலும் தகவல் தெரிவிப்பவர்களுக்கு பாராட்டும் வெகுமதியும் அளிக்கப்படும்”என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
**-வினிதா**
�,