மதுரை என்கவுன்ட்டர் தொடர்பாக காவல் துறையினர் அறிக்கை தாக்கல் செய்ய மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மதுரையில் கொலை, கொள்ளை வழக்குகளில் தேடப்பட்டுவந்த முத்து இருளாண்டி மற்றும் சகுனி கார்த்தி ஆகிய ரவுடிகள் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். மதுரை – திண்டுக்கல் சாலையில் உள்ள சிக்கந்தர்சாவடியில் இருவரும் பதுங்கி இருப்பதாக போலீஸாருக்குக் கிடைத்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களைச் சுற்றி வளைத்தனர். அப்போது அங்கிருந்து இருவரும் தப்பிக்க முயற்சித்து போலீஸாரை நோக்கி கைதுப்பாக்கியால் சுட்டனர். தற்காப்பு நடவடிக்கைக்காக போலீஸாரும் பதில் தாக்குதல் நடத்தியதில் இருளாண்டி, கார்த்தி இருவரும் பலியாகினர்.
இருவரின் உடல்களும் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த என்கவுன்ட்டரைத் திட்டமிட்டுச் செய்யவில்லை என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், ரவுடிகளை போலீசார் உடம்பின் மற்ற இடங்களில் சுடாமல் தலையில் சுட்டது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக மனித உரிமை அமைப்பினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
செய்தித்தாள் தகவலின் அடிப்படையில் தாமாக முன்வந்து விசாரிப்பதாகத் தெரிவித்த மாநில மனித உரிமை ஆணையம், 8 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனக் காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக வாடிப்பட்டி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி விக்னேஷ்மது இன்று விசாரணையைத் தொடங்கியுள்ளார். மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் இருந்து இந்த விசாரணை தொடங்கி நடைபெற்றுவருகிறது. விசாரணை அறிக்கைக்குப் பிறகே உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடல்கள் வைக்கப்பட்டுள்ள மருத்துவமனையில் அவர்களது உறவினர்கள் குவிந்தவண்ணம் உள்ளனர்.�,