வரும் ஏப்ரல் 12ஆம் தேதி நடைபெறவுள்ள ஆர்.கே நகர் இடைத்தேர்தலையொட்டி, அரசியல் கட்சியினர் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், சசிகலா அணியின் வேட்பாளர் தினகரன் வாக்காளர்களுக்கு பணம் தருவதாக திமுக, உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. பதிலுக்கு, தினகரன் அணியினரும் தேர்தல் ஆணையத்திடம் திமுக மற்றும் பன்னீர்செல்வம் அணியின் மீது புகார் தெரிவித்துள்ளனர். இதனால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை கண்காணிக்க 3 பார்வையாளர்களையும், கூடுதலாக 2 சிறப்பு பார்வையாளர்களையும் நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அரசியல் கட்சிகள் சார்பில் பணப் பட்டுவாடா செய்யப்படுவதாக தொடர்ந்து வந்த புகார்களையடுத்து, இந்திய துணைத் தேர்தல் ஆணையர் உமேஷ் சின்கா 30ஆம் தேதி வியாழக்கிழமை சென்னையில் ஆர்.கே நகர் இடைத்தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினார்.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, பணப் பட்டுவாடாவை தடுக்க ஆர்.கே.நகர் தொகுதியின் முக்கியச் சாலைகள், சந்திப்புகள், சோதனைச் சாவடிகள், சிக்னல்களில் காமிரா பொருத்தப்படும் என்றும், 256 வாக்குச்சாவடி மையங்களில் வெப் காமிரா பொருத்தப்படும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, மாதிரி வாக்குப்பதிவு மையமும் அமைக்கப்படவுள்ளது. தேர்தல் முடியும் ஏப்ரல் 12ஆம் தேதி வரை இரவு நேரங்களில் 2 ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகள் இரவுநேர ரோந்துப் பணியை மேற்கொள்வார்கள். பறக்கும் படையினர் ஜிபிஎஸ் கருவியை பயன்படுத்துவார்கள்.மேலும் தொகுதிக்கு வெளியே பணப் பட்டுவாடாவைத் தடுக்க 5 தனிப் படைகளும் அதேபோல், வேட்பாளர்களின் தேர்தல் செலவுகளைக் கண்காணிக்க 5 தேர்தல் அதிகாரிகளும் நியமிக்கப்படுவார்கள்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இன்று 31ஆம் தேதி வெள்ளிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த துணை தேர்தல் ஆணையர் உமேஷ் சின்கா, ‘வேட்பாளர்களின் பரிசுப் பொருட்களை வாக்களர்கள் யாரும் வாங்கக்கூடாது. வேட்பாளர்கள் யாரும் ஓட்டுகளை விலை கொடுத்து வாங்கக் கூடாது. இடைத்தேர்தல் அமைதியாக நடைபெற வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.
�,”