சவுட்டு மணல் கொண்டு கட்டப்பட்ட பள்ளிக் கட்டடத்தின் சுவர் மற்றும் கட்டடத்தைத் தாங்கி நிற்கும் தூண்கள் மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதால், அந்தப் பள்ளியின் மாணவர்கள் அச்சத்தில் உள்ளனர்.
நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை வட்டத்திலுள்ள தர்மதானபுரம் ஊராட்சியில், ஊரக வளர்ச்சித் துறை மற்றும் உள்ளாட்சித் துறை சார்பில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் புதிய கட்டடம் அமைக்கப்பட்டது. 2016-2017ஆம் ஆண்டில் ஊரக வளர்ச்சி நிதியிலிருந்து 10 லட்சமும், சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து 12 லட்சமுமாக, மொத்தம் 22 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் அது கட்டப்பட்டது.
இந்த கட்டடம் கட்டிய சில மாதங்களிலே, பெருமழையின் காரணமாக அதன் சுவர் மற்றும் தூண்கள் ஆகியவை மழைநீரில் கரையத் தொடங்கின. இதனால் பள்ளிக் கட்டடம் மழை நீரில் கரைந்து, தூணின் உள்பக்கமிருந்த கம்பி வெளியேதெரிந்தது. இதையடுத்து, தரமற்ற பள்ளிக் கட்டடத்தை முழுவதுமாக இடித்துவிட்டு புதிய கட்டடம் கட்ட வேண்டும் என்று ஊர் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தனர்.
இதுதொடர்பாகப் பேசிய ஊர் பொதுமக்கள், பள்ளிக் கட்டடம் கட்டும்போது ஆற்று மணல் கிடைக்கவில்லை என்று செங்கல் சூளையில் இருந்த சவுட்டு மணல் கட்டுமானத்துக்குப் பயன்படுத்தப்பட்டதாகத் தெரிவித்தனர். “இதனால், ஒரு மழைக்குக்கூட தாங்காமல் கட்டடம் கரைந்திருக்கிறது. இந்த பள்ளிக்கூடம் கட்டுறப்போ 2 தடவை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். இருந்தாலும், பள்ளி இப்பவரைக்கும் இப்படித்தான் இருக்கு. ஆட்சியர் ஆய்வு செய்தபிறகு, கட்டடத்தின் மேல்பூச்சு சரியில்லை என்று சிமென்ட் பூசினார்கள். இருந்தாலும், தரமற்ற இந்த கட்டடம் உயிரைப் பலி கேட்கும். அதற்குள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பள்ளிக் கட்டடத்தைச் சீர் செய்ய வேண்டும்” என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
�,