காமராஜர் பல்கலை துணைவேந்தர் நியமனத்தில் நிர்பந்தம்!

public

மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் தேர்வுக்குழு ஒருங்கிணைப்பாளர் கொடுத்த அழுத்தத்தால், துணை வேந்தர் பதவிக்கு செல்லத்துரைக்கு போதிய அனுபவம் இல்லை என தெரிந்தே நியமனம் செய்தோம் என்று தேர்வுக்குழு உறுப்பினர்கள் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பதில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

தமிழகத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் என நான்கு பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் பதவி காலியாக இருந்து வந்தன. இதில், அண்ணா பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகங்களில் கடந்த ஓராண்டாகவும், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாகவும் துணைவேந்தர்கள் இல்லாமல் இயங்கி வந்தன. இந்த நேரத்தில் 3 நபர் கொண்ட நிர்வாகக் குழு அமைக்கப்பட்டு பல்கலைக்கழகம் நிர்வகிக்கப்பட்டன. இந்நிலையில், கடந்த மே 27ம் தேதி சென்னை பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக துரைசாமியும், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக செல்லதுரையும் நியமிக்கப்பட்டனர்.

முதலில் ஒரு பல்கலைக்கழக துனை வேந்தரைத் தேர்ந்தெடுக்க துணை வேந்தர் தேடுதல் குழு அமைக்கப்படும். ஒருவரை பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக நியமிக்கப்படுவதற்கு அவர் 10 ஆண்டுகள் பேராசிரியராக பணிபுரிந்திருக்க வேண்டும். கௌரவமான கல்விப்புல பின்னணி கொண்டிருக்க வேண்டும். ஆனால், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துக்கு துணை வேந்தராக நியமிக்கப்பட்டுள்ள செல்லதுரைக்கு பேராசிரியராக பணியாற்றிய அனுபவம் கிடையாது. அதனால், அவரை துணை வேந்தராக நியமனம் செய்ததை ரத்து செய்ய வேண்டும் என்று அப்போதே எதிர்ப்புகள் எழுந்தன.

இந்நிலையில்தான், மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் மதுரை மாவட்டச் செயலாளராக உள்ள, மதுரை எஸ்.எஸ்.காலனியைச் சேர்ந்த லயோனல் அந்தோணிராஜ் ஜூலை 11ஆம் தேதி, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு பொது நல மனு தாக்கல் செய்தார். அதில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மதுரை காமராஜர் பல்கலைக்கழகப் பாதுகாப்பு குழுவின் கன்வீனராக நியமிக்கப்பட்ட பேராசிரியர் சீனிவாசன் என்பவரை ஒரு கும்பல் தாக்கியது. இதில் படுகாயம் அடைந்த அவர் புதுக்கோட்டை நாகமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தத் தாக்குதல் தொடர்பாக விசாரித்த போலீஸார், தற்போது காமராஜர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக உள்ள செல்லதுரை உள்பட சிலர் மீது வழக்குப்பதிவு செய்தனர். அந்த வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது. அதுமட்டுமில்லாமல், துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ள செல்லதுரைக்குப் பேராசிரியராகப் பணியாற்றிய அனுபவமும் கிடையாது. ஒருவர் பல்கலைக்கழக துணை வேந்தராக நியமிக்கப்படுவதற்கு குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பேராசிரியராக பணியாற்றியிருக்க வேண்டும். அதனால், குற்ற வழக்கு பின்னணியும், பேராசிரியராகப் பணியாற்றிய அனுபவமும் இல்லாத செல்லதுரை மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமிக்கப்பட்டது செல்லாது என்றும் அவர் பல்கலைக்கழகத்தில் புதிய பணியிடங்களை நிரப்புவதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் அமர்வு, இந்த வழக்கில் தமிழக பல்கலைக்கழகங்களின் வேந்தரான தமிழக ஆளுநரை எதிர் மனுதாரராக சேர்த்து மனுத்தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். இதையடுத்து, நீதிமன்ற உத்தரவுப்படி, தமிழக ஆளுநரை எதிர் மனுதாரராக சேர்த்து மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக செல்லதுரை விதிமுறைகளின்படி தான் நியமிக்கப்பட்டாரா என்பதை நிரூபிக்க வேண்டும். அதனால், இந்த வழக்கில் துணைவேந்தரை நியமிக்கும் அதிகாரம் பெற்ற ஆளுநர் எதிர் மனுதாரராக சேர்க்கப்பட்டுள்ளதால் தமிழக ஆளுநரின் செயலர், பல்கலைக்கழகப் பதிவாளர் ஆகியோர் காரமராஜர் பல்கலைக்கழகத் துணைவேந்தராக செல்லதுரை நியமிக்கப்பட்டதற்கான ஆவணங்களை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

இதனிடையே இன்று ஆகஸ்ட் 1ம் தேதி இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் தேர்வுக் குழு உறுப்பினர்கள் ஹரிஷ் மேத்தா, ராமகிருஷ்ணன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பதில் மனு தாக்கல் செய்தனர். அதில், மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தராக செல்லதுரைக்கு போதிய அனுபவம் இல்லை என தெரிந்தே நியமித்தோம். செல்லத்துரைக்கு 10 ஆண்டுகள் பேராசிரியராக பணியாற்றிய அனுபவம் இல்லை. ஆனால், துணை வேந்தர் தேர்வுக்குழு ஒருங்கிணைப்பாளர் முருகதாஸ் நிர்பந்தத்தால் செல்லதுரையை துணைவேந்தராக நியமனம் செய்ய பரிந்துரைத்தோம். தேர்வுக்குழு ஒருங்கிணைப்பாளர் முருகதாஸின் நிர்ப்பந்தத்தால், தேர்வுக்குழுவிலிருந்த மற்றொரு தேர்வுக் குழு உறுப்பினர் மு.ராமசாமி விலகிக்கொண்டார் என்று தெரிவித்துள்ளனர்.

இதைடுத்து, துணைவேந்தர் செல்லதுரை, உயர்கல்வித்துறை செயலர், துணைவேந்தர் தேர்வுக் குழு ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் ஆகஸ்ட் 16-ம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 16ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *