சட்டசபையில் அத்துமீறி நடந்து கொண்ட இரண்டு எம்.எல்.ஏ.க்களை கடுமையாக வசைபாடி கடும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார் திமுக செயல்தலைவர் மு.க ஸ்டாலின்.
தமிழக சட்டமன்றத்தில் நேற்று நடந்த களேபரங்களும், கூத்துகளும் காலத்தால் அழிக்க முடியாத அவமானம். இதற்கு இந்தியாவில் உள்ள அனைத்து அரசியல் கட்சியினரும் நீக்கமற தங்கள் கண்டனங்களை பதிவு செய்து வருகிறார்கள். குறிப்பாக திமுகவினர் சட்டசபையில் நடந்து கொண்ட விதம் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கிறது. திமுகவிற்கு சசிகலாவே பரவாயில்லை என்று கூறியிருக்கிறார் பாஜக எம்பி சுப்பிரமணியன் சுவாமி. நம்பிக்கை வாக்கெடுப்பின் போது நடந்த அத்தூமீறல்கள் ஜனநாயகத்திற்கு நடந்த பெரும் அவமதிப்பு என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் . திருமாவளவன் கூறியிருக்கிறார். திராவிடக் கழகத் தலைவர் வீரமணி நேரடியாகவே திமுகவை கடுமையாக விமர்சித்திருக்கிறார். இது குறித்து அவர் பேசும் போது, “தமிழக சட்டமன்றத்தில் நடந்த நிகழ்வுகள் ஜனநாயகத்துக்கு ஏற்பட்ட தீராத கறையாகும். எந்த அணிக்கும் ஆதரவில்லை என்று தொடக்கத்தில் கூறப்பட்ட நிலையோடு திமுக நின்றிருந்தால், இவ்வளவு மனவேதனையும், வெட்கப்படத்தக்க, திமுக-வின் அரசியல் வரலாற்றில் களங்கம் ஏற்படும் நிலையும் ஏற்பட்டிருக்காது. சபாநாயகர் நாற்காலியில் அமர்வது, இருக்கையை உடைப்பது, அண்ணாவின் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுக்கு முற்றிலும் உரியதாக இல்லவேயில்லை. வெட்கமும், வேதனையும்பட வேண்டிய தலைகுனிவான நிலையும்கூட! இதற்குமுன்பு அறிவித்த நிலைப்பாட்டிற்கு மாறான நிலைப்பாட்டில் சிக்கிக் கொண்டதால், இதற்குமுன் காக்கப்பட்ட அதன் மாண்பு குலைந்துள்ளது இந்தக் கட்டத்தில் முதிர்ந்த தலைவர் கருணாநிதி சபையிலிருந்து வழி நடத்த இல்லாததால் ஏற்பட்ட நிலைமை இது என்று பளிச்சென்று விளங்கியது” என்று கூறியிருக்கிறார். சட்டசபையில் திமுக எம்.எல்.ஏ.க்கள் நடந்து கொண்ட விதம் திமுகவினருக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை மறுக்க முடியாது. எம்எல்ஏக்களின் அத்துமீறலால் திமுக செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் கடும் அதிருப்தியோடும் கோபத்தோடும் இருந்திருக்கிறார். இந்நிலையில் நேற்று சட்டசபையில் அத்துமீறி நடந்து கொண்ட எம்.எல்.ஏ.க்களான கு.க. செல்வம் மற்றும் ரங்கநாதன் ஆகியோரை நேரில் அழைத்திருக்கிறார் ஸ்டாலின். அவர்களிடம், “யாரைக் கேட்டு இப்படியான அநாகரிகமான காரியங்களை செய்தீர்கள். எதைச் செய்வது, எதைச் செய்யக் கூடாது என்பது உங்களுக்குத் தெரியாதா? சட்டசபையின் மாண்பை குழைக்கும் செயலைச் செய்து திமுகவிற்கு அவப்பெயர் தேடிக் கொடுத்த உங்களை என்ன செய்வது? இந்த நிலை நீடித்தால் நான் எந்த முடிவையும் எடுக்கத் தயங்கமாட்டேன். இதுவே உங்களுக்கு இறுதி எச்சரிச்கை” என்று தன் ஆத்திரம் தீரும் மட்டும் வசைபாடி தீர்த்திருக்கிறார் ஸ்டாலின். சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் இருவரும் குனிந்த தலையோடு அமைதி காத்திருக்கிறார்கள்.�,