அத்திவரதரை தரிசிக்க வரும் 23ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி காஞ்சிபுரம் வர இருக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில், 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோற்றமளிக்கும் அத்திவரதரின் உற்சவம் கடந்த ஜூலை 1ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தினந்தோறும் லட்சக்கணக்கானோர் அத்திவரதரை நீண்ட வரிசையில் நின்று தரிசித்துச் செல்கின்றனர். பொதுமக்கள் வசதிக்காக அத்திவரதர் இருக்கும் இடத்தை மாற்ற வேண்டும் என்று பக்தர்கள் வைத்த கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது. இதற்கிடையே சில நாட்களுக்கு முன்பு அத்திவரதர் தரிசனத்தின்போது கூட்டநெரிசலில் சிக்கி 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதற்கு கடும் கண்டனம் எழுந்ததையடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பின்னர் நேற்றிரவே காஞ்சிபுரம் சென்ற தலைமைச் செயலாளர் சண்முகம், டிஜிபி திரிபாதி ஆகியோர் பக்தர்கள் இறந்தது குறித்தும், பாதுகாப்பு பிரச்சினைகள் குறித்தும் ஆலோசனை நடத்தினர். இரவு 12 மணிக்கு ஆரம்பித்து 3 மணி வரை நீண்ட இந்தக் கூட்டத்தில் முக்கியமாக மேலும் சில விஷயங்களும் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.
அதில், ‘கடந்த காலத்தில் அத்திவரதர் சயன கோலத்தில் 24 நாட்களும், நின்ற கோலத்தில் 24 நாட்களும் காட்சியளிப்பார். இந்த நிலையில் வரும் 23ஆம் தேதி பிரதமர் காஞ்சிபுரம் வந்து அத்திவரதரை தரிசிக்க இருக்கிறார். 23ஆம் தேதி சயனக் கோலத்திலும் 24ஆம் தேதி நின்ற கோலத்திலும் அத்திவரதரை பிரதமர் தரிசிக்க ஏற்பாடு செய்யலாமா” என்ற யோசனை சொல்லப்பட்டிருக்கிறது.
இதற்கு கோவில் நிர்வாகம் தரப்பிலிருந்து, “வழக்கமாக அவ்வாறான நடைமுறையைத்தான் கடைபிடித்துவருகிறோம். ஆனால் இம்முறை அவ்வாறு செய்வது சாத்தியமா என்பது தெரியவில்லை. ஏனெனில் பல ஆண்டுகளாக நீரில் இருப்பதால் அத்திவரதரை நின்ற கோலத்தில் காட்சியளிக்க ஏற்பாடு செய்யமுடியுமா என்று தெரியவில்லை. எனவே கடைசி 10 நாட்களுக்கு மட்டும் நின்ற கோலத்தில் காட்சியளிக்க ஏற்பாடு செய்யலாம்” என்று சொல்லியிருக்கிறார்கள்.
இதனைத் தொடர்ந்து இன்று (ஜூலை 21) காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் டிஜிபி தலைமையிலும், சுகாதாரப் பணிகள் தொடர்பாக சுகாதாரச் செயலாளர் தலைமையிலும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய டிஜிபி திரிபாதி, “அத்திவரதர் வைபவத்திற்காக 5000க்கும் மேற்பட்ட காவலர்கள் பணியில் உள்ளனர். மேலும் கூடுதல் தன்னார்வலர்கள் உதவி செய்ய அழைப்பு விடுக்கிறோம்” என்று தெரிவித்தார்.
**
மேலும் படிக்க
**
**[டிஜிட்டல் திண்ணை: துரைமுருகனுக்கு திமுக தந்த அதிர்ச்சி – வேலூர் திருப்பம்!](https://minnambalam.com/k/2019/07/20/71)**
**[ அத்தி வரதர்: கலெக்டரை கண்டித்த முதல்வர்](https://minnambalam.com/k/2019/07/21/26)**
**[ஆகஸ்டில் இங்கிலாந்து பறக்கும் தனுஷ்](https://minnambalam.com/k/2019/07/20/17)**
**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்!](https://minnambalam.com/k/2019/07/13/17)**
**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்! – 2](https://minnambalam.com/k/2019/07/13/54)**
�,”