என் அப்பா முழுமையான மனிதராக ஓய்வெடுக்கச் சென்று விட்டார் என்று வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் உருக்கமாகத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கன்னியாகுமரி காங்கிரஸ் எம்பி வசந்த குமார், கொரோனா வைரஸ் தொற்றால் ஆகஸ்ட் 10ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவருக்கு வைரஸ் தொற்று குணமடைந்த நிலையில் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை மோசமானதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 28ஆம் தேதி மாலை உயிரிழந்தார்.
வசந்தகுமாரின் உடல் சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது வீட்டிலும், தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்திலும், பின்னர் அங்கிருந்து எடுத்து வரப்பட்டு கன்னியாகுமரி அகத்தீஸ்வரத்தில் உள்ள அவரது இல்லத்திலும் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
இதை தொடர்ந்து நேற்று காலை புறப்பட்ட அவரது இறுதி ஊர்வலத்தில் பல்வேறு கட்சியினர், வணிகர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அகத்தீஸ்வரத்தில் உள்ள அவரது குடும்ப கல்லறைத் தோட்டத்திற்கு, உடல் எடுத்துச் செல்லப்பட்டு இறுதி சடங்குகள் முடிந்ததும் அடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில் வசந்தகுமாரின் மனைவி தமிழ்ச்செல்வி, மகள் தங்கமலர், மகன்கள் விஜய் வசந்த், வினோத் குமார் ஆகியோருக்கு பல்வேறு தரப்பினரும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் அப்பாவின் உடல் அடக்கம் முடிந்ததும் விஜய் வசந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், 50 ஆண்டுகளுக்கு முன்பு, அவருக்கு 20 வயதாக இருந்தபோது, என் தந்தை கனவுகளை மட்டுமே சுமந்துகொண்டு சென்னைக்கு வந்தார். 50 ஆண்டுகளுக்குப் பிறகு, அவரது கனவுகள் அனைத்தையும் நனவாக்கிய பின்னர் தனது கிராமத்துக்கே ஒரு முழுமையான மனிதராக ஓய்வெடுக்கச் சென்றுவிட்டார். உங்கள் பிரார்த்தனைகளுக்கும், அஞ்சலிகளுக்கும், இரங்கல்களுக்கும் நன்றி. மிஸ் யூ அப்பா” என உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.
**-கவிபிரியா**
�,”