அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமி வீட்டில் மாவட்டச் செயலாளர்கள் பெரும்பாலானோர் படையெடுத்து வருகிறார்கள். நேற்று வரை ஓ.பன்னீர் செல்வம் அணியில் இருந்த விருதுநகர் மேற்கு மாசெ ரவிச்சந்திரன் கூட இன்று எடப்பாடி வீட்டுக்குச் சென்றுவிட்டார். கட்சியைக் காக்க அண்ணன் எடப்பாடி பழனிசாமி மீது அனைத்து நிர்வாகிகளும் நம்பிக்கை வைத்திருப்பதாக முன்னாள் அமைச்சர் உதயகுமார் எடப்பாடியின் வீட்டு வாசலில் தெரிவித்தார்.
இந்த நிலையில்… ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வத்தின் சென்னை வீட்டில் தொண்டர்கள் குவிந்து வருகிறார்கள். பரபரப்பான நிலையில் தொண்டர்கள் முன் ஓ.பன்னீர்செல்வம் வந்து ஒவ்வொருவருக்காய் வணக்கம் செலுத்தி அவர்களின் ஆதரவை பெற்றுக் கொண்டார். சில நிமிடங்கள் தொண்டர்களை சந்தித்த ஓ.பன்னீர் செல்வம், அடுத்து துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், சட்டமன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி. பிரபாகர் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார்கள்.
இதேநேரம் எடப்பாடி பழனிசாமியின் வீட்டில் அதிமுகவின் பெரும்பாலான மாவட்டச் செயலாளர்கள் தங்கள் ஆதரவாளர்களோடு திரண்டு வந்து எடப்பாடிக்கு ஆதரவான முழக்கங்களை எழுப்பினார்கள். நேற்று வரை பன்னீருக்கு ஆதரவாக இருந்த நெல்லை மாவட்டச் செயலாளர் தச்சை கணேசராஜா, விருதுநகர் கிழக்கு மாசெ சாத்தூர் ரவிச்சந்திரன் இன்று எடப்பாடி இல்லத்துக்கு வந்தார்கள். ஓ.பன்னீர்செல்வத்தின் அணியில் இருந்த மாசெக்கள் ஒவ்வொருவராக எடப்பாடியின் இல்லம் நோக்கி திரண்டு வருகிறார்கள்.
பொதுச் செயலாளர் எடப்பாடியார், ஒற்றைத் தலைவர் எடப்பாடியார் என்ற முழக்கங்கள் எடப்பாடி பழனிசாமியின் வீட்டில் தொடர்ந்து ஒலித்து வருகின்றன.
-**வேந்தன்**