சென்னையில் விடிய விடிய இடைவிடாது பெய்த மழை காரணமாக மாநகரமே ஸ்தம்பித்துள்ளது. மழை நீர் அகற்றப்பட்ட சுரங்கப்பாதைகளில் மீண்டும் மழை நீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிகமாகப் பெய்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த தாழ்வு மண்டலமாக உருமாறி இன்று மாலை சென்னைக்கு அருகே கரையைக் கடக்கவுள்ளது.
இதன் காரணமாகச் சென்னையில் இரவு முழுவதும் விடிய விடிய மழை பெய்தது. நேற்று மாலை பெய்யத் தொடங்கிய மழை தற்போது வரை நீடிக்கிறது. மழையால் நகரின் பல்வேறு பகுதிகளும் தீவு போல் காட்சி அளிக்கிறது.
சென்னை அசோக் நகர் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. அங்குள்ள 16ஆவது அவென்யூவில் மழை நீர் சூழ்ந்துள்ளதால், வீடுகளை விட்டு வெளியே வரமுடியாமல் மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதியில், உள்ள தொழில் நிறுவனங்கள் மழை நீரில் மிதக்கின்றன. இதனால் அந்த பகுதியில் பல்வேறு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. ஊழியர்கள் பணிக்குச் செல்ல முடியாத நிலை உள்ளது.
இதுபோன்று, வேளச்சேரி,தி.நகர், நசரத்பேட்டை, குன்றத்தூர், வளசரவாக்கம், போரூர், கோடம்பாக்கம், மதுரவாயல், பூந்தமல்லி, ஆகிய பகுதிகளில் மிகக் கனமழை பெய்து கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இரவு முழுவதும் பெய்த மழையால் மாநகரின் பல்வேறு பகுதிகளில் 36,000க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளன.
இன்று காலை 4.30 மணி நிலவரப்படி, எண்ணூரில் அதிகபட்சமாக 17.5 செ.மீ. மழைப் பதிவு பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நுங்கம்பாக்கத்தில் 14 செ.மீ., எம்ஆர்சி நகரில் 13.6 செ.மீ. மழைப் பதிவாகியிருப்பதாகக் கூறியுள்ளது.
நேற்று இரவு முதல் பெய்து வரும் கனமழையால் பல்வேறு சுரங்கப் பாதைகள் மற்றும் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் வியாசர்பாடி , கணேசபுரம் , அஜாக்ஸ் , கெங்கு ரெட்டி, மேட்லி , துரைசாமி , பழவந்தாங்கல் , தாம்பரம் , அரங்கநாதன், வில்லிவாக்கம் , கக்கன் ஆகிய 11 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளன.
மழைநீர் தேங்கியுள்ளதன் காரணமாக, கே.கே நகர் – ராஜ மன்னார் சாலை, மயிலாப்பூர் -டாக்டர் சிவசாமி சாலை, ஈ வி ஆர் சாலை காந்தி இர்வின் சந்திப்பு முதல் டாக்டர் நாயர் பாலம் வரை, செம்பியம் – ஜவஹர் நகர் , பெரவள்ளுர் -70 அடி சாலை, புளியந்தோப்பு நெடுஞ்சாலை, பட்டாளம் மணி கூண்டு, வியாசர்பாடி-முல்லை நகர் பாலம் சாலைகள் மூடப்பட்டுள்ளன.
**-பிரியா**
�,