தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பை மத்திய அரசு தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று தகைசால் தமிழர் நல்லகண்ணு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கான்பூரில் 1925 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதி நடந்த முதல் கட்சி மாநாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்கப்பட்டது. அதன் 99ஆம் ஆண்டு தொடக்க விழா மற்றும் தகைசால் தமிழர் அய்யா நல்லகண்ணுவின் 99-வது பிறந்த நாள் விழா சென்னை பாலன் இல்லத்தில் இன்று (டிசம்பர் 26) நடைபெற்றது.
வெள்ள பாதிப்பை முன்னிட்டு எளிமையான முறையில் நடைபெற்ற இந்த விழாவில் தமிழ்நாடு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் இரா. முத்தரசன், திமுக சார்பில் ஆ.ராசா எம்.பி ஆகியோர் கலந்துகொண்டனர்.
நல்லக்கண்ணு போன்ற தலைவர்கள் தேவை!
அப்போது ஆ.ராசா பேசுகையில், “இந்தியாவின் அரசியல் தளத்தில் எத்தனையோ மாறுபட்ட கொள்கைகள் இருந்தாலும், இடதுசாரி சிந்தனையில் இருந்து இன்றும் நழுவாமல் நம் அனைவருக்கும் எடுத்துகாட்டாக அய்யா நல்லகண்ணு வாழ்ந்து வருகிறார்.
இந்தியா ஒரு இறையாண்மையுள்ள ஜனநாயக, குடியரசு, மதசார்பற்ற நாடு என்று தான் நாட்டின் அரசியலமைப்பு சட்ட முதல்வரியில் உள்ளது.
இதனை ஒருபோதும் மாற்றக்கூடாது என்று 13 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு 1972ஆம் ஆண்டு தீர்ப்பளித்துள்ளது.
ஆனால் அதனை அகற்றி மாற்றி எழுத வேண்டும் என்று இந்தியாவின் துணைக்குடியரசுத் தலைவரே பேசுகின்ற ஆபத்தான காலத்தில் நாம் உள்ளோம்.
இதுபோன்ற ஆபத்தில் இருந்து தேசத்தை மீட்க வேண்டும் என்றால் நல்லகண்ணு போன்ற தலைவர்கள் வழியில் நாம் இயங்க வேண்டும்.
அதற்கு என்றும் திராவிட மாடல் அரசு உறுதுணையாக நிற்கும்” என்று ஆ.ராசா தெரிவித்துள்ளார்.
தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்!
தொடர்ந்து அய்யா நல்லக்கண்ணு பேசுகையில், “இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 99வது ஆண்டில் இன்று நாம் அடியெடுத்து வைத்துள்ளோம்.
இந்த நேரத்தில் மழைவெள்ளதால் பாதிக்கப்பட்ட மக்களுடன் நாம் அனைவரும் உறுதுணையாக நிற்க வேண்டும்.
தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பை மத்திய அரசு தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும். தமிழ்நாடு அரசு கேட்டுள்ள ரூ.21 ஆயிரம் கோடியை வழங்க வேண்டும்” என்று நல்லக்கண்ணு தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
”ஸ்ரீவைகுண்டம் எப்படி இருக்கு?”: உதயநிதியிடம் விசாரித்த அய்யா நல்லகண்ணு
அதிமுக பொதுக்குழு : கே.பி.முனுசாமி வராதது ஏன்?
தூத்துக்குடியில் நிர்மலா சீதாராமன் நேரில் ஆய்வு!