கெஜ்ரிவாலுக்கு 9வது முறையாக சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை

அரசியல் இந்தியா

டெல்லியில் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9வது முறையாக அமலாக்கத்துறை இன்று (மார்ச் 17) சம்மன் அனுப்பியுள்ளது.

டெல்லியில் மதுபான கொள்கையை வகுத்து அமல்படுத்தியதில் ஊழல் நடைபெற்றதாக பாஜக குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. இதனை விசாரித்த அமலாக்கத்துறை அதிகாரிகள் டெல்லி முன்னாள் துணை முதல்வரும், கலால்துறை அமைச்சருமான மணிஷ் சிசோடியா மற்றும் ஆம் ஆத்மி மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங் ஆகியோரை கைது செய்தனர்.

இதனைத் தொடர்ந்து, மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தொடர்பு இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, அமலாக்கத்துறையினர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது வழக்குப் பதிவு செய்து, அவருக்கு எட்டு முறை சம்மன் அனுப்பி இருந்தனர். ஆனால், சம்மனை ஏற்று அவர் ஆஜராகாமல் புறக்கணித்து வந்தார்.

இதனிடையே, மதுபான கொள்கை முறைகேடு வழக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உத்தரவிடக்கோரி டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனுதாக்கல் செய்தது. இந்த வழக்கில், அவர் நேற்று (மார்ச் 16) ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து, நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் நேரில் ஆஜராகிய நிலையில், அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில், மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9வது முறையாக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இந்த சம்மனில் கெஜ்ரிவால் மார்ச் 21ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

இந்து

தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய மார்க்சிஸ்ட் கட்சி!

யோதா : விமர்சனம்!

+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *