சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்டது அவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவருடன் நடித்து வந்த குமரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.
சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ், மக்கள் டிவி, என முக்கிய தொலைக்காட்சிகளில் பணியாற்றி வந்தவர் விஜே சித்ரா. இறுதியாகப் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை என்ற கதாபாத்திரம் மூலம் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தைக் குவித்தவர்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில், கதிர் முல்லை கதாபாத்திரத்துக்கு, KM Fans என்ற பெயரில் தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. கூட்டுக் குடும்பத்தில் அனைவரிடமும் அனுசரித்துப் போகும் ஒரு கிராமத்துப் பெண்ணாக சித்ரா நடித்து வந்தார். பிடிக்காமல் திருமணம் செய்து கொண்டு பின்னர், கதிருக்கும் முல்லைக்கும் ஏற்படும் காதல் சீரியலில் அழகாக காட்சியமைக்கப்பட்டிருக்கும்.
இந்த சீரியலின் முக்கிய கதாபாத்திரமான தனத்தை(சுஜிதா) காட்டிலும் சித்ராவுக்குத்தான் அதிகளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாகச் சர்ச்சையும் எழுந்தது. இன்ஸ்டாகிராமில் சித்ராவுக்கு 1.5 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்ஸ் உள்ளனர். பெரும்பாலும் புன்னகை முகத்துடனே காட்சியளிக்கும் சித்ரா, இன்று அதிகாலை தற்கொலை செய்துகொண்டார் என்ற தகவல் அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
#Ripchitra என்ற ஹாஷ் டேக் மூலம், சித்ராவின் மரணம் தொடர்பாக நண்பர்கள் உட்படப் பெரும்பாலானோர் கருத்து பதிவிட்டு வருகின்றனர். நேற்று கூட சக நடிகர்களுடன் கலகலப்பாக இருந்துவிட்டு, தற்கொலை செய்து கொண்டதால் நம்ப முடியாத அதிர்ச்சியில் இருக்கின்றனர். குறிப்பாக நேற்று நள்ளிரவு வரை சித்ரா இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருந்துள்ளார்.
சித்ராவின் உடல் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு ரசிகர்களும், சக நடிகர்களும், நண்பர்களும், குடும்பத்தினரும் குவிந்த வண்ணம் இருக்கின்றனர். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் சித்துவுடன் நடித்து வந்த ஸ்டாலின் (மூர்த்தி), உடல் வைக்கப்பட்டுள்ள மருத்துவமனைக்கு சென்று கண்ணீர்விட்டு கதறி அழுதுள்ளார்.
இந்நிலையில், அவருக்கு ஜோடியாக நடித்த குமரன் தனது இன்ஸ்டாகிராமில் சித்ரா மரணம் குறித்து உருக்கமாகப் பதிவிட்டுள்ளார். அதில், “நீ உன்னுடைய தைரியத்தால் தான் அறியப்பட்டாய் .பல பெண்களுக்கு முன் உதாரணமாக இருந்த நீ எதிர்த்துப் போராடி இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஆனால் இது பதில் அல்ல என்று கூறி ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
**-பிரியா**
�,”