அம்பேத்கருடன் பிரதமர் நரேந்திர மோடியை இளையராஜா ஒப்பிட்டு கூறிய கருத்துக்கு பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் யுவன் சங்கர் ராஜா ஒரு பதிவை பகிர்ந்துள்ளார்.
அம்பேத்கர் அன்ட் மோடி என்ற நூலினை புளூ கிராஃப் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இந்த நூலுக்கு இசையமைப்பாளர் இளையராஜா முன்னுரை எழுதியுள்ளார்.
மோடியின் தலைமையில் இந்தியாவின் வளர்ச்சியையும் அம்பேத்கர் கருத்துகளையும் ஒப்பிட்டு அந்த புத்தகத்தில் பேசியிருப்பவர், ‘இருவருமே ஒடுக்கும் சமூக அமைப்பையும் வறுமையும் உடைத்து எறிந்தவர்கள். இந்தியாவுக்கான பெரிய கனவுகளை கண்டு அதை நிறைவேற்ற வேண்டும் என்ற லட்சிய எண்ணம் கொண்டு செயல்படுத்துபவர்கள்’ என அதில் கூறியுள்ளார்.
இளையராஜாவின் இந்த கருத்துக்கு தான் தற்போது எதிர்வினைகள் கிளம்பியுள்ளன. இளையராஜாவின் இந்த கருத்துக்கு பிஜேபியை சேர்ந்த பல முக்கிய தலைவர்களும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், இளையராஜா தன் கருத்தை திரும்ப பெற போவதில்லை என தெரிவித்துள்ளதாக அவரது தம்பியும் இசையமைப்பாளருமான கங்கை அமரன் பத்திரிக்கைக்கு கொடுத்த சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், இளையராஜாவின் மகன் இசையமைப்பாளருமான யுவன் ஷங்கர் ராஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு கருப்பு வேட்டி சட்டையுடன் இருக்கும்படியான புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், ‘கருப்பு திராவிடன்; பெருமை மிகு தமிழன்’ என்ற கேப்ஷனையும் கொடுத்துள்ளது ரசிகர்களிடையே வைரல் ஆகி உள்ளது.
இதற்கு முன்பு யுவன் ‘இந்தி தெரியாது போடா!’ என டீஷர்ட்டில் வாசகம் எழுதியது வைரல் ஆனது குறிப்பிடத்தக்கது.
**ஆதிரா.**
.