தமிழ் சினிமாவில் முன்னணி நடன இயக்குனர் சிவசங்கர். 100க்கும் மேற்பட்ட படங்களுக்கு நடனம் அமைத்துள்ளார்.
திருடா திருடி படத்தில் இவர் நடனம் அமைத்த மன்மதராசா பாடல் இன்றளவும் பேசப்படுகிறது. கடைசியாக பாகுபலி படத்திற்கு நடனம் அமைத்திருந்தார். இதுதவிர வரலாறு, கண்ணா லட்டு தின்ன ஆசையா, பரதேசி, தில்லு முல்லு, தானா சேர்ந்த கூட்டம், அரண்மனை, சர்கார், உள்பட ஏராளமான படங்களிலும் நடித்துள்ளார்.
72 வயதான சிவசங்கருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு ஹைதராபாத்தில் உள்ள ஏஐஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது மனைவி, மூத்த மகன் ஆகியோருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சிவசங்கர் மட்டும் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கிறார்.
அவரது இளைய மகன் அஜய் கிருஷ்ணா உடன்இருந்து கவனித்து வருகிறார். மருத்துவ செலவுக்கு பணம் இல்லை. பணம் தந்து உதவுங்கள் என்று அவர் தனது சமூக வலைத்தளத்தின் மூலம் வேண்டுகோள் விடுத்தார்.
இந்நிலையில் சிவசங்கரின் சிகிச்சைக்கு உதவி கோரும் ஒரு ட்வீட்டை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள நடிகர் சோனு சூட் ‘நான் ஏற்கெனவே சிவசங்கரின் குடும்பத்துடன் தொடர்பில் இருக்கிறேன். அவரது உயிரை காக்க என்னால் முடிந்த உதவியை செய்கிறேன்’ என்று பதிவிட்டுள்ளார்.
**-இராமானுஜம்**
�,