இந்தியப் பொருளாதார வளர்ச்சியில் மாவட்டங்களின் பங்களிப்பை உயர்த்தும் நோக்கில் அவற்றின் வளர்ச்சியை 3 சதவிகிதம் வரையில் உயர்த்தும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ளது.
இதுகுறித்து மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சகம் ஏப்ரல் 18ஆம் தேதி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்தியப் பொருளாதார வளர்ச்சியில் மாவட்டங்களை மேலும் தீவிரமாக ஈடுபடுத்தும் நோக்கத்துடன் இந்த மாவட்டத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன்படி, தேசிய அளவில் வளர்ச்சியை உறுதிசெய்ய மாவட்ட வளர்ச்சியை விரைவுபடுத்த வேண்டிய அவசியம் உள்ளது. மேலும், ஆதாரங்கள் அடிப்படையிலான திட்டங்களை உருவாக்குவதும் அதற்காகக் கீழ்நிலை அமைப்புகளுக்கு முக்கியத்துவம் தரும் அணுகுமுறையும் அவசியமாகிறது. மாவட்டங்களின் வளர்ச்சி விகிதம் 3 சதவிகிதம் அதிகரித்தால் இந்தியப் பொருளாதாரத்தின் மதிப்பு 5 லட்சம் கோடி டாலர் இலக்கை எட்டும்.
இந்தத் திட்டத்தில் மாவட்ட வாரியாக, சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் மேம்பாடு, திறன் மேம்பாட்டுப் பயிற்சி, எளிதாகத் தொழில் தொடங்கும் அம்சம், கடனுதவி பெறுதல் ஆகியவற்றுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும். இத்திட்டத்தை அமல்படுத்துவதற்கு மாநில அரசுகள் மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் சிந்துதுர்க் மற்றும் ரத்தினகிரி, உத்தரப் பிரதேசத்தில் வாரணாசி, பீகாரில் முஜாபர்பூர், ஆந்திரப் பிரதேசத்தில் விசாகப்பட்டினம், இமாசலப் பிரதேசத்தில் சோலன் ஆகிய மாவட்டங்கள் இத்திட்டத்துக்கு முதற்கட்டமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளன. திட்ட உருவாக்கம் மற்றும் அமலாக்கம் ஆகியவற்றைக் கண்காணிக்க வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சர் தலைமையில் சிறப்புக் குழு ஒன்று அமைக்கப்படும்’ என்று கூறப்பட்டுள்ளது.�,