“தமிழகத்தில் இரண்டாவது முறையாக மீண்டும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படும்” என்று தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் கடந்த 2015ஆம் ஆண்டு உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது. மிகவும் பிரமாண்டமாக நடைபெற்ற இந்த மாநாட்டில் பல நாடுகளிலிருந்து முதலீட்டாளர்கள் வந்திருந்தார்கள். இந்த மாநாட்டின் மூலம் சுமார் ரூ.2 லட்சத்து 42 ஆயிரம் கோடி முதலீடு திரட்டப்பட்டதாகத் தமிழக அரசு சார்பாக தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து முதல்வர் பழனிசாமி உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2018ஆம் ஆண்டு நடத்தப்படும் என்று கடந்த ஆண்டே அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நேற்று (ஜனவரி 29) நடைபெற்றது. துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, செங்கோட்டையன், எம்.சி.சம்பத் ஆகியோர் இதில் பங்கேற்றனர். முதலீட்டாளர்கள் மாநாட்டை எந்த மாதம் நடத்தலாம், எந்தெந்த நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கலாம், முதலீடுகளை ஈர்ப்பதற்கான புதிய வழிமுறைகள் போன்றவை தொடர்பாக விவாதிக்கப்பட்டது.
ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் எம்.சி.சம்பத், “ஒரு வாரத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கான தேதி அறிவிக்கப்படும்” என்றும் அதை முதல்வர் அறிவிக்க உள்ளதாகவும், “ஐந்து மாதத்துக்குள் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படும்” என்றும் கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசும்போது, “மாநாட்டுக்காகத் தனி அதிகாரி ஒருவர் நியமிக்கப்படுவார்” என்றும் அமைச்சர் சம்பத் தெரிவித்துள்ளார்.�,