தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்குமாறு டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது அதிமுக. இந்த வழக்கின் விசாரணை அடுத்த வாரம் நடைபெறும் எனத் தெரிவித்துள்ளது உச்ச நீதிமன்றம்.
கடந்த டிசம்பர் மாதம் நடந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாக குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் தினகரன். இதையடுத்து, விரைவில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் தங்களுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்குமாறு தேர்தல் கமிஷனை உத்தரவிடக்கோரி, அவர் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், மார்ச் 9ஆம் தேதியன்று தீர்ப்பு வழங்கினார் நீதிபதி ரேகா பள்ளி. குக்கர் சின்னத்தை தினகரன் தரப்புக்கு வழங்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து, கடந்த 15ஆம் தேதியன்று மதுரை மேலூரில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற அமைப்பைத் தொடங்கினார் தினகரன். இதற்கு ஒருநாள் முன்னதாக, குக்கர் சின்னத்தை தினகரனுக்கு வழங்கிய உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து, டெல்லி உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தது அதிமுக தரப்பு. அதில், கட்சி தொடங்கும் முன்னரே சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணைய விதிகளுக்கு முரணானது என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த மனு உடனடியாக விசாரிக்கப்பட வேண்டுமென்று, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையீட்டு மனு அளிக்கப்பட்டது. இது, நேற்று (மார்ச் 21) விசாரணைக்கு வந்தது.
இதைத் தொடர்ந்து, குக்கர் சின்ன மேல் முறையீட்டு வழக்கின் விசாரணை அடுத்த வாரம் தொடங்கும் எனத் தெரிவித்துள்ளது உச்ச நீதிமன்றம். இதையடுத்து, மார்ச் 26 அல்லது 30ஆம் தேதியன்று இந்த வழக்கு விசாரணைக்கு வரும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
�,