இந்தியாவில் சுமார் 1,20,000 இளம்பருவத்தினர் எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டுள்ளதாக யுனிசெஃப் எச்சரித்துள்ளது.
2017ஆம் ஆண்டில் 19 வயதுக்குட்பட்ட 1,20,000 குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினர் எச்.ஐ.வி.யுடன் இருந்துள்ளதாக யுனிசெஃப் மதிப்பிட்டுள்ளது. தெற்காசியாவிலேயே இந்தியாவில் தான் அதிகபட்சமான இளம் பருவத்தினர் எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டுள்ளனர். எச்.ஐ.வி பரவுவதை தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் 2030ஆம் ஆண்டுக்குள் உலகளவில் ஒவ்வொரு நாளும் எய்ட்ஸ் நோயால் 80 இளம் பருவத்தினர் உயிரிழக்க நேரிடும் என்று யுனிசெஃப் எச்சரித்துள்ளது. குழந்தைகள், இளம் பருவத்தினர், கர்ப்பிணிப் பெண்கள், தாய்மார்கள் ஆகியோரிடையே எச்.ஐ.வி ஆபத்தைக் குறைப்பதில் தெற்காசிய நாடுகள் சிறப்பான முன்னேற்றத்தை எட்டியுள்ளதாக யுனிசெஃப் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
2017ஆம் ஆண்டில் இந்தியாவில் 19 வயது வரையிலான 1,20,000 குழைந்தகளும், இளம் பருவத்தினரும் எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் 5,800 பேரும், நேபாளத்தில் 1,600 பேரும், வங்கதேசத்தில் 1,000க்கும் குறைவானவர்களுமே எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போதைய போக்கையும், புள்ளிவிவரங்களையும் வைத்துப் பார்க்கையில் எய்ட்ஸ் நோயால் ஏற்படும் மரணங்களும், புதிய நோய் தொற்றுகளும் குறைந்துள்ளன. எனினும் இந்த சரிவு போதிய வேகத்தில் நடைபெறுவதில்லை என்று இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. தற்போது உலகளவில் 19 வயதுக்குட்பட்டவர்களில் சுமார் 30 லட்சம் பேர் எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.�,