�
தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு 475 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடந்துள்ளது.
தமிழகத்தில் 4,500க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளன. சாதாரண நாட்களில் இக்கடைகளில் 70 கோடி முதல் 85 கோடி ரூபாய் வரை மது விற்பனை நடப்பது வழக்கம். வார இறுதி நாட்களாக இருந்தால், 90 கோடி ரூபாய் வரை விற்பனை நடைபெறும். குறிப்பாக புத்தாண்டு, தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளுக்கு மது விற்பனை அதிகமாக இருக்கும். அது போன்றுதான், இந்த பொங்கல் பண்டிகையின்போது மது விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்குத் தொடர்ந்து ஆறு நாட்கள் விடுமுறை கிடைத்தது. அதன்படி, ஜனவரி 12ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை மட்டும் 475 கோடி ரூபாய்க்கு டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை நடைபெற்றுள்ளது. கடந்த 12ஆம் தேதி 105 கோடி ரூபாய்க்கும், 13ஆம் தேதி 120 கோடி ரூபாய்க்கும், 14ஆம் தேதி 110 கோடி ரூபாய்க்கும், 15ஆம் தேதி 140 கோடி ரூபாய்க்கும் மது விற்பனை நடைபெற்றுள்ளது. கடந்தாண்டு போகி மற்றும் பொங்கல் பண்டிகைக்கு 220 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடந்தது.
மதுபானங்களில் 60 சதவிகிதம் பிராந்தி, 30 சதவிகிதம் விஸ்கி மற்றும் பீர் ரகங்கள் விற்பனையானதாக டாஸ்மாக் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.�,