புதுவையில் தமிழக பேருந்துகளின் மீது கல் வீசிய பாஜகவினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சபரிமலை விவகாரம் தொடர்பாக புதுச்சேரியில் இன்று (நவம்பர் 26) பாஜக சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. சபரிமலை விவகாரம் கேரளா தொடர்புடையது என்றும் அதற்காக புதுவையில் போராட்டம் நடத்துவது தேவையற்றது என்றும் முதல்வர் நாராயணசாமி கூறியிருந்தார். கடைகளை அடைக்க சொல்லி மிரட்டுவது போன்றவற்றில் ஈடுபட்டால் கைது செய்யப்படுவார்கள் என்றும் பாஜகவினருக்கு அவர் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
பந்த் காரணமாக, பெரும்பாலான தனியார் பேருந்துகள் இயங்கவில்லை. போலீஸ் பாதுகாப்போடு புதுச்சேரி அரசு பேருந்துகள் மற்றும் ஒரு சில தனியார் பேருந்துகள் இயங்கி வருகின்றன. கடைகள், சந்தைகள் போன்றவை வழக்கம் போல் இயங்கி வருகின்றன. அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் இருக்க போலீசார் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
எனினும் 11 பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளன. இதில் 5 தனியார் பேருந்துகள், மீதமுள்ள 6 அரசு பேருந்துகள் ஆகும். பேருந்து கண்ணாடி உடைப்பு தொடர்பாக பாஜகவை சேர்ந்த 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல், போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாஜகவினரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பேருந்துகள் மீது கல் வீசப்படுவதால், பாதுகாப்பிற்காக ஓட்டுநர்கள் தலை கவசம் அணிந்து பேருந்துகளை இயக்கி வருகின்றனர்.
�,”