ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சோபியான் மாவட்டத்தில் நேற்று (ஜூலை 5) கடத்தப்பட்ட காவலர் ஜாவேத் அகமத் தர், இன்று காலை பிணமாக மீட்கப்பட்டார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கண்காணிப்பாளராகப் பணியாற்றிவரும் ஷைலேந்திர மிஸ்ராவின் தனி உதவியாளராக இருந்து வந்தவர் காவலர் ஜாவேத் அகமத் தர். சோபியான் மாவட்டத்தைச் சேர்ந்த இவர், நேற்று மாலை தனது வீட்டில் இருந்து ஒரு மருந்தகத்துக்குச் சென்றார். அங்கு, சில மர்ம நபர்களால் கடத்தப்பட்டார் ஜாவேத். இந்த தகவல் தெரிய வந்ததும், காஷ்மீர் காவல் துறை அவரைத் தேடும் பணியைத் துரிதப்படுத்தியது.
ஜாவேத் ஊரான கச்தூரா என்ற கிராமத்தில், கடந்த ஏப்ரல் மாதம் ஐந்து பயங்கரவாதிகளைச் சுட்டுக் கொன்றது பாதுகாப்புப் படை. இதற்குப் பழிவாங்கும் விதமாகவே, அவர் கடத்தப்பட்டதாகக் கூறப்பட்டது. இதனால், அவரைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்த நிலையில், சமூக வலைதளமொன்றில் ஜாவேத் சட்டையில்லாமல் பிணமாகக் கிடக்கும் புகைப்படம் வெளியானது. இதனையடுத்து, இன்று (ஜூலை 6) காலை டங்கன் என்ற பகுதியில் அவர் பிணம் கண்டெடுக்கப்பட்டது. ஜாவேத் உடலின் பல பகுதிகளில் குண்டுகள் பாய்ந்திருந்தன. இன்று காலை, தக்க காவல் துறை மரியாதையுடன் அவரது சடலம் அடக்கம் செய்யப்பட்டது.
ஜம்மு காஷ்மீர் மாநில பாதுகாப்பு நிலவரம் குறித்து விவாதிப்பதற்காக, நேற்று அங்கு சென்றிருந்தார் மத்திய உள் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங். அதோடு, அம்மாநில ஆளுநர் என்.என்.வோராவைச் சந்தித்துப் பேசியிருந்தார். இந்த நிலையில், நேற்று பயங்கரவாதிகள் சிலரால் ஜாவேத் கடத்திக் கொல்லப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மாதம் புலவாமா மாவட்டத்தில் ஔரங்கசீப் என்ற ராணுவ வீரர் பயங்கரவாதிகளால் கடத்திச் சென்று கொலை செய்யப்பட்டார். பகல்பொழுதில் இந்த கடத்தல் நிகழ்ந்தது. இந்த சம்பவங்களைத் தொடர்ந்து, காஷ்மீர் மாநிலம் முழுவதும் தேடுதல் வேட்டையை பரவலாக்கியுள்ளது பாதுகாப்புப் படை.
�,”