�
பாகனைக் கொன்ற திருப்பரங்குன்றம் கோயில் யானை வனப்பகுதிக்கு அனுப்பப்படுகிறது.
திருப்பரங்குன்றம் முருகன் கோயில் யானை தெய்வானை திருவிழாக்களில் சாமி புறப்பாட்டில் வலம் வருதல், சரவண பொய்கையில் இருந்து தினமும் புனிதநீர் எடுத்து வருதல் போன்ற பணியில் அவ்வப்போது ஈடுபட்டாலும் பக்தர்கள் அருகில் செல்ல முடியாத நிலையில் ஆக்ரோஷமாகவே இருந்து வந்தது.
மேலும், கடந்த ஆண்டில் பாகன்கள் கணபதிமுருகன், கனகசுந்தரம், உதவியாளர் சிதம்பரம் ஆகியோரை அடுத்தடுத்து தாக்கியது. அதில் கணபதிமுருகனுக்கு கால் முறிவு ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த 24ஆம் தேதி மாலையில் குளிக்கவைக்க சென்றபோது தெய்வானை திடீரென்று ஆக்ரோஷப்பட்டு தும்பிக்கையால் பாகன் காளிதாஸ் என்பவரை தூக்கி சுவரில் அடித்துக் கொன்றது.
இதனையடுத்து மருத்துவக்குழு கட்டுப்பாட்டில் இருந்து வந்தது. மேலும், சீரான நிலைக்குத் திரும்பியதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதற்கிடையில் வன உயிரினப் பாதுகாப்பு அலுவலர்கள் யானையை பார்வையிட்டனர். இதையடுத்து யானை தெய்வானையை வனப்பகுதியில் விடுவதற்கு முடிவு செய்யப்பட்டது. அதன்படி இன்று (ஜூன் 1) அதிகாலையில் திருச்சி அருகே உள்ள எம்.ஆர்.பாளையத்தில் உள்ள வன உயிரின வனப்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதற்காக நேற்று (மே 31) இரவு கோயிலுக்கு யானைகளை ஏற்றி செல்லக் கூடிய தனி சிறப்பு வாகனம் மற்றும் வன உயிரின அதிகாரிகள் வந்தனர். ஆகவே, பாதுகாப்பாக உயிரின வனப்பகுதிக்கு தெய்வானை அனுப்பி வைக்கப்படுகிறது என்று கோயில் வட்டாரங்கள் தெரிவித்தன.
**-ராஜ்**�,