ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி, மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தூத்துக்குடி மாவட்டத்தில் வாகனப் பிரச்சாரப் பயணம் மேற்கொள்கிறார். ஸ்டெர்லைட் ஆலையின் காரணமாக தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு பல்வேறு நோய்களும், சுற்றுச் சூழல் மாசும் ஏற்படுவதாக மக்கள் கடந்த ஒன்றரை மாதங்களாக வீதிகளில் இறங்கிப் போராடி வருகிறார்கள்.
இந்தப் போராட்டத்துக்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் நேரில் சென்று ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் ஸ்டெர்ட்லைட் விவகாரத்தில் ஆரம்பம் முதலே அந்த ஆலைக்கு எதிராக எல்லாவகையிலும் போராடி வரும் மதிமுக பொதுச் செயலாளர் வரும் 17-ம் தேதி முதல், வாகனப் பிரச்சாரப் பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார்.
17-ம் தேதி மாலை கோவில்பட்டியில் இருந்து புறப்படும் வைகோவின் வாகனப் பிரசாரம், எட்டயபுரம், புதூர், நாகலாபுரம், விளாத்திகுளம் வழியாக வைப்பார், குளத்தூரில் முடிகிறது. பின் மீண்டும் 18-ம் தேதி மாலை 5 மணிக்கு கரிசல் குளத்தில் புறப்பட்டு ஒட்டப்பிடாரம் உள்ளிட இடங்களில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பயணம் செல்கிறார் வைகோ.
பயணம் முடியும் நாளான ஏப்ரல் 28-ம் தேதி சனிக்கிழமை மாலை 6 மணிக்கு தூத்துக்குடி வி.வி.டீ. சிக்னல் அருகில் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார் வைகோ.
கடந்த மார்ச் 31-ம் தேதி முதல் ஏப்ரல் 10-ம் தேதி வரை நியூட்ரினோ திட்டத்துக்கு எதிராக தேனி மாவட்டத்தில் நடைபயணம் மேற்கொண்டார் வைகோ. இதற்கிடையில் ஸ்டெர்லைட் விவகாரத்தில் வைகோவின் நற்பெயருக்கு இழுக்கு ஏற்பட்டதாக மனம் உடைந்து வைகோவின் மருமகனான சரவணன் சுரேஷ் தீக்குளித்து சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார்.
இந்நிலையில் தனது மருமகனின் இறுதிச் சடங்குகள் முடிந்த கையோடு வைகோ ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக வாகனப் பிரசாரப் பயணத்தை அறிவித்திருப்பது குறிப்பிடத் தக்கது.�,