‘ஒடிசாவில் தமிழகத்தைச் சேர்ந்த அதிகாரி கார்த்திகேயன் பாண்டியன் ஐஏஎஸ் மீது நடத்திய தாக்குதலை நியாயப்படுத்தி வரும் அமைச்சர் தர்மேந்திர பிரதானை பதவிநீக்கம் செய்ய வேண்டும்’ என மத்திய அரசை வைகோ வலியுறுத்தியுள்ளார்.
மதுரை மேலூரைச் சேர்ந்த அதிகாரி கார்த்திகேயன் பாண்டியன் ஐஏஎஸ். இவர் ஒடிசாவில் முதல்வர் நவீன் பட்நாயக்கின் தனி செயலராக உள்ளார். கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி ஒடிசா தலைநகர் புவனேஸ்வரத்தில் உள்ள இவரது வீட்டுக்கு பாரதிய ஜனதா கொடியுடன் வந்த புவனேஸ்வரம் நகர பாஜக தொண்டர்கள் அவர் மீது கொலைவெறித் தாக்குதலை நடத்தி உள்ளனர். மேலும், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவரான மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திரா பிரதான், ‘ஒடிசா மக்களின் வரிப்பணத்தில் இருந்து மாத ஊதியம் பெறும் அரசு ஊழியரான பாண்டியன், ஒடிசா மக்கள் போராடத் தயங்க மாட்டார்கள் என்று கருதிவிட வேண்டாம்’ என்று கூறி இருக்கின்றார்.
இதுகுறித்து நேற்று (பிப்ரவரி 17) கண்டனம் தெரிவித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “எப்படியாவது ஒடிசா மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு வந்துவிட வேண்டும் என்று துடிக்கின்ற காரணத்தால், நவீன் பட்நாயக் அவர்களை வீழ்த்த நினைக்கும் பாஜக, ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வன்மம் கொண்டு இருப்பது அப்பட்டமாகத் தெரிகிறது” என்று குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், “தமிழர்களுக்கு வெளிநாட்டிலும் ஈழத்திலும் பாதுகாப்பு இல்லை. இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களிலும் ஐஏஎஸ் போன்ற உயர் அலுவலர்களாகப் பதவியில் இருந்தாலும் உயிருக்கு உத்தரவாதம் இல்லை. வெளி மாநிலங்களில் பணியாற்றும் தமிழகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் உள்ளிட்ட தமிழர்களுக்குப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது மத்திய – மாநில அரசுகளின் கடமை” என்று குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து தனது அறிக்கையில், கார்த்திகேயன் பாண்டியன் இல்லத்தின் மீது தாக்குதல் நடத்திய கும்பலைக் கைது செய்து, சட்டத்தின்முன் நிறுத்த வேண்டும் என ஒடிசா அரசையும், இந்தத் தாக்குதலை நியாயப்படுத்திப் பேசிவருகின்ற தர்மேந்திர பிரதானை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என மத்திய அரசையும் வைகோ வலியுறுத்தியுள்ளார்.�,